உறுப்பினர் சேர்க்கையில் மதிமுக, காங். தீவிரம்
சென்னை:
மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தனித்தனியாக நடந்தது. இருகூட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கையை முடுக்கி விட முடிவு செய்யப்பட்டது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசனைக் குழுக் கூட்டம் சென்னையில் இன்றுநடந்தது. கட்சியின் அவைத் தலைவர் எல்.கணேசன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர்வைகோ, பொருளாளர் கண்ணப்பன், முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 9 மற்றும் 10 ஆகியதேதிகளில் கோவை மாவட்டம் பல்லடத்தில் நடைபெறவுள்ள கட்சியின் விவசாயிகள் மாநாட்டை சிறப்பாகநடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
முக்கிய முடிவாக, கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
இதேபோல, தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது.இக்கூட்டத்திற்கு மேலிடப் பிரதிநிதியான கே.பி.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர்இதில் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள், உறுப்பினர் சேர்க்கையை முடுக்கிவிடுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் வாசன், இளங்கோவன் கோஷ்டி மோதல் தொடர்பாகவும் மேலிடப் பிரதிநிதிகிருஷ்ணமூர்த்தி கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்தார்.