சிறை அதிகாரியுடன் மோதிய திருநாவுக்கரசர்
வேலூர்:
வேலூர் சிறைக்குச் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களை அழைத்துச் சென்ற முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. எம்.பியுமானதிருநாவுக்கரசரின் காரை உள்ளே விட சிறை அதிகாரி மறுத்ததால், அவருடன் திருநாவுக்கரசர் கடும் வாக்குவாதம் செய்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் குழுவினரை வேலூர் சிறைக்கு திருநாவுக்கரசர் அழைத்துச் சென்றார்.
எம்.பிக்கள் குழுவினர் 3 தனிக் கார்களிலும், திருநாவுக்கரசர் தனிக் காரிலும் வந்தனர். சிறைக்கு வந்ததும், எம்.பிக்கள் கார்களை மட்டுமேஉள்ளே அனுமதிக்க முடியும் என்றும் திருநாவுக்கரசர் காரை உள்ளே அனுமதிக்க முடியாது என்றும் துணை ஜெயிலர் பழனி தெரிவித்தார்.
இதனால் கடும் கோபமடைந்த திருநாவுக்கரசர், நான்தான் எம்.பிக்களை அழைத்து வந்துள்ளேன். ஆனால் நான் சிறைக்குள் செல்லப்போவதில்லை. காரை மட்டும் உள்ளே அனுமதித்தால் போதும் என்றார். இதை ஏற்க பழனி மறுத்து விட்டார்.
இதனால் கோபமடைந்த திருநாவுக்கரசர், எனது கார் தான் முதலில் செல்லும், அதுவரை நான் காரை விட்டு இறங்க மாட்டேன் என்று கூறிவிட்டு காருக்குள்ளேயே அமர்ந்து விட்டார். மற்ற எம்.பிக்களின் கார்களும் பின்னாலேயே நின்றன.
இதைத் தொடர்ந்து துணை ஜெயிலர் பழனி, கண்காணிப்பாளரிடம் பேசினார். இதையடுத்து திருநாவுக்கரசர் தனது காரிலேயே சிறைக்குள்செல்ல அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மற்ற கார்களும் உள்ளே அனுமதிக்கப்பட்டன.