நாகையில் படகு ரிப்பேர் பணியில் ராணுவம்: கடலுக்குத் திரும்பிய மீனவர்கள்
நாகப்பட்டிணம்:
சுனாமியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகப்பட்டிணம் பகுதி மீனவர்கள் இன்று மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்கச்சென்றனர்.
இப் பகுதியில் சுமார் 2,000 உயிர்களை இழந்த மீனவ கிராமம் அக்கரைப்பேட்டை. இங்கு நூற்றுக்கணக்கான படகுகள் சுனாமிஅலைகளால் உடைந்து நொறுங்கிவிட்டன. மேலும் நூற்றுக்கணக்கான படகுகள் சேதங்களுடன் தப்பியுள்ளன.
இந்தப் படகுகளை ரிப்பேர் செய்யும் பணியில் கடந்த 3 நாட்களாக மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்களுக்கு பெங்களூரைத்தலைமையகமாகக் கொண்ட ராணுவத்தின் பெங்களூர் மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப் பிரிவு உதவியது.
தங்களது உபகரணங்களைக் கொண்டு படகுகளை இந்த ராணுவப் பிரிவு சரி செய்து கொடுத்து வருகிறது. இவ்வாறு சரிசெய்யப்பட்ட பல படகுகளில் இன்று காலை மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் சென்றனர்.
இத் தகவலை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரும் அக்கரைப்பேட்டையில் நிவாரணப் பணிகளை கவனித்து வருபவருமான டாக்டர்ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கடந்த மாதம் 26ம் தேதி சுனாமி தாக்குதலுக்குப் பின் கடலுக்குள் செல்லும் முதல் மீனவர் குழு இதுதான்.
இதனால் ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர்கள் பத்திரமாகக் கரை சேர வேண்டும் என்ற கவலையுடன் காணப்பட்டார்ராதாகிருஷ்ணன்.
அக்கரைப்பேட்டையில் 7,000 மீனவர் குடும்பங்கள் வசித்து வந்தன. இதில் இரண்டாயிரம் உயிர்கள் பலியாகிவிட்டன.
ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
இப் பகுதியில் மீட்புப் பணிகள் முடிந்துவிட்டன. இப்போது நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் மறு கட்டுமானப்பணியையும் தொடங்கிவிடுவோம்.
முதலில் படகுகளை சரி செய்து தந்தால் தான் இப் பகுதியில் வாழ்க்கை திரும்பும். இதனால் தான் அந்தப் பணியை முடுக்கிவிட்டோம். மீண்டும் கடலுக்குள் போனால் தான் மீனவர்களுக்கு வாழ்க்கையே.
படகுகளை தயார் செய்தவுடன் கடலுக்குள் செல்ல தைரியமாக முன் வந்துவிட்டனர் மீனவர்கள். அவர்களது தைரியமும் தெம்பும்ஆச்சரியமளிக்கிறது.
சுனாமி தாக்கிய இரு நாட்களும் இப் பகுதிக்குள் நுழையக் கூட முடியவில்லை. வழியெல்லாம் உடைந்த படகுகள், எங்கும்முட்கள், உடைந்த போன பாலங்கள், தேங்கி நிற்கும் தண்ணீர், இடிபாடுகள் என மிக மோசமான நிலைமை என்றார்ராதாகிருஷ்ணன்.
இதன் பின்னர் சமூக நலத் தொண்டர்களும் ராணுவத்தினரும் களமிறங்கிய பின்னரே மீட்புப் பணிகள் சூடுபிடித்துள்ளன.ராணுவத்தினர் தங்ளது புல்டோசர்களை பீல்டில் இறக்கியதையடுத்துத் தான் இப் பகுதிகுள் மக்களால் நுழையவே முடிந்திருக்கிறது.
இப் பகுதியில் சாலைகளை மீட்டதோடு, தாற்காலிகமாக சாலைகளை அமைத்துவிட்ட ராணுவம் பல இடங்களில் மின்இணைப்புகளையும் சரி செய்துவிட்டது. இப்போது படகுகளை ரிப்பேர் செய்யும் பணி தீவிரமாகியுள்ளது.
இதே போல சுனாமியால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கீச்சாங்குப்பம் பகுதியை மீட்டெடுக்கும் பணியிலும் ராணுவம் தீவிரமாகஈடுபட்டுள்ளது. நாட்டிலேயே அதிக அளவில் கருவாடு உற்பத்தி செய்யும் பகுதி இது.
இங்குள்ள சந்தையில் கருவாடு விற்பனை மாதத்துக்கு ரூ. 1 கோடியைத் தாண்டும். ஆனால், கோடிக்கணக்கான மதிப்புள்ளகருவாடு கடல் அலைகளுக்கு இரையாகிவிட்டது. மீண்டும் கருவாடு தயாராகவே 3 மாதங்கள் ஆகிவிடும் என்கின்றனர் இப் பகுதிமீனவர்கள்.
இந்த கீச்சாங்குப்பத்திலும் 1,000 உயிர்கள் பலியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.