கர்நாடக முதல்வருடன் வைகோ சந்திப்பு: மைசூர் சிறை தமிழர்களை விடுவிக்க கோரிக்கை
பெங்களூர்:
கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம் மாநில முதல்வர் தரம்சிங்கைநேரில் சந்தித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்தார்.
வீரப்பனுக்கு உதவியதாகக் கூறி அப்பாவித் தமிழர்கள் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.தமிழர்கள் என்பதால் அவர்களை ஏளமானகவும், மிகக் கொடூரமாகவும் சிறை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் பெங்களூர் வந்த வைகோ, முதல்வர் தரம்சிங்கை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். அப்போது கோரிக்கை மனுஒன்றையும் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், கர்நாடக சிறைகளில் ஏராளமான தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறு வழக்குகள்,பொய் வழக்குகள் என ஏராளமான வழக்குகள் அவர்கள் மீது போடப்பட்டுள்ளன. 2 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் விசாரணைக்கைதிகளாகவே உள்ளனர்.
குணசேகர், பேராசியர் நெடுஞ்செழியன் ஆகியோரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்னிடம் அவர்களது குடும்பத்தார்நேரடியாக கேட்டுக் கொண்டனர். அதன் காரணமாகவே நான் தரம்சிங்கை நேரில் சந்திக்க வந்தேன்.
எனது கோரிக்கைகளை கவனமுடன் படித்துப் பார்த்த முதல்வர், உடனடியாக உள்துறைச் செயலாளர், முதன்மைச் செயலாளர் ஆகியோரைவரவழைத்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகத்தில் 70 லட்சம் தமிழர்கள் உள்ளனர். அவர்களுக்கு பல்வேறு விதமான பிரச்சினைகள் உள்ளன. பேருந்துகளில், பொது இடங்களில்தமிழில் பேசக் கூட பயப்படும் நிலை உள்ளது. உயிருக்கு அஞ்சியவண்ணம் அவர்கள் வசிக்கிறார்கள்.
தமிழகத்திலும் கன்னடர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் எந்தவித பயமும் இல்லாமல், வாழ்ந்து வருகின்றனர். அதை முதல்வரிடம் எடுத்துச்சொன்னேன். தமிழக நிலை கர்நாடகத்திலும் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். கண்டிப்பாக தக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்உறுதியளித்தார்.
எனது வருகை இரு மாநில நல்லுறவை வலுப்படுத்தும் என்றார் வைகோ.
வைகோ கொடுத்த மனுவில் 13 தமிழர்களின் விடுதலை குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.