பாஜகவுக்கு தெலுங்கு தேசம் கும்பிடு
ஹைதராபாத்:
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகி விட தெலுங்கு தேசம் முடிவு செய்துள்ளது.
இந்தியா ஒளிர்கிறது என்று பாஜக கோஷம் போட காரணமாக இருந்தவர் தெலுங்கு தேசத்தின் தலைவரும் அப்போதையே ஆந்திரமுதல்வருமான சந்திரபாபு நாயுடு. பில் கேட்ஸ் உள்ளிட்டவர்களை ஆந்திராவுக்கு அழைத்து வந்து தன்னை வாழ்த்த வைத்ததோடு,பொருளாதார வளர்ச்சியில் ஆந்திரா எங்கேயோ போய்விட்டதாக பிரச்சாரம் செய்தார்.
இவரைப் பார்த்துத் தான் பாஜகவும் சூடு போட்டுக் கொண்டது. ஆந்திரா மட்டுமல்ல இந்தியாவே ஒளிர்கிறது என்று கிளம்பினார்கள்.
ஆட்சியிலேயே பங்கேற்காமல் அத்வானி, வாஜ்பாய்க்கு அடுத்த நிலையில் மத்திய அரசில் மிகுந்த பலம் வாய்ந்தவராக இருந்தார் நாயுடு.
தனது கட்சிக்கு பெரும் ஆதரவு இருப்பதாக நினைத்த நாயுடு, சட்டமன்றத்தை முன்னதாகவே கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கத்தயாரானார். இதே நினைப்பில் இருந்த பாஜகவும் அவருடன் சேர்ந்து நாடாளுமன்றத்தையே கலைத்துவிட்டு முன் கூட்டியே தேர்தலைசந்தித்தது.
ஆனால், மத்தியில் பாஜகவும் ஆந்திராவில் நாயுடும் லாரி, லாரியாய் மண்ணைக் கவ்வினர். ஒருவரை நம்பி ஒருவர் கெட்ட கதையாய்,இருவரும் ஒருவரை நம்பி இன்னொருவர் கெட்டனர்.
தேர்தல் தோல்விக்கு நரேந்திர மோடி நடத்திய குஜராத் மதக் கலவரம் தான் காரணம் என கண்டுபிடித்தார் நாயுடு. நாயுடுவின் இந்தக்கருத்தால் பாஜகவுடன் முதல் மோதல் ஏற்பட்டது. பின்னர் அந்த மோதல் அப்படியே தணிக்கப்பட்டது.
ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஓடிவிட்ட நிலையில் தேர்தல் தோல்வியில் இருந்து தெலுங்கு தேசத்தால் இன்னும் மீளமுடியவில்லை. இதனால் புதிய அரசியல் யுத்திகளை அக் கட்சி தேடி வருகிறது.
சமீபத்தில் நடந்த அக் கட்சியின் பொலிட்பீரோ கூட்டத்தில் பேசிய பெரும்பாலான நிர்வாகிகள், பாஜகவுடன் கூட்டு வைத்ததே தேர்தல்தோல்விக்குக் காரணம் என்று பேசியதோடு அக் கட்சியை விட்டு உடனே விலக வேண்டும் என நாயுடுவை நிர்பந்துள்ளனர்.
நாயுடுவின் வலதுகரமான எர்ரன் நாயுடுவும் பாஜகவை கடுமையாகத் தாக்கினார். அவர் பேசுகையில்,
இவர்களோடு கூட்டு வைத்திருக்கும் வரை உள்ளாட்சித் தேர்தலில் கூட நாம் வெல்ல முடியாது.மேலும் மீண்டும் ராமர் கோவில்அஸ்திரத்தை அத்வானி கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு ஆந்திர மக்களிடம் எந்த ஆதரவும் கிடைக்காது. இந் நிலையில்அத்வானியோடு கூட்டு வைப்பது நல்லதல்ல என்று பேசியிருக்கிறார் எர்ரன் நாயுடு.
இத்தனைக்கும் பாஜக ஆட்சியில் டெல்லியில் பாஜகவுக்கும் நாயுடுவுக்கும் இடையே பாலமாக செயல்பட்டவர் எர்ரன் நாயுடு.
பின்னர் நிருபர்களிடம் பேசிய எர்ரன் நாயுடு, அடிப்படைவாதம், மதவாதம் இதை வைத்துக் கொண்டு அரசியல் நடத்துவதை தெலுங்குதேசம் ஆதரிக்காது. ராமர் கோவில் விவகாரத்தைத் தூண்டிவிட்டு மத மோதல்கள் நடக்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.
நக்ஸல்களின் கோபத்தைத் தணித்து அவர்களது ஆதரவு மக்களின் ஓட்டுக்களை வாங்கும் வகையில் இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டணிஅமைத்து புதிய அணியை உருவாக்க தெலுங்கு தேசம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தெலுங்கு தேசத்தைப் போலவே இடதுசாரிகளும் தனி தெலுங்கானா மாநிலம் அமைவதை எதிர்ப்பதும் இருவரையும் ஒரேஅலைவரிசைக்குக் கொண்டு வந்துள்ளது. தேசிய அளவிலும் இந்தக் கூட்டணியை விரிவாக்கி அதில் சமாஜ்வாடிக் கட்சியையும் சேர்க்கநாயுடு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறு.
தங்களை தெலுங்கு தேசம் மட்டமாக நடத்த ஆரம்பித்துவிட்டதை ஆந்திர பாஜக தலைவர்களும் உணர்ந்துவிட்டனர். இதையடுத்து வரும்உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே போட்டியிடப் போவதாக முன் கூட்டியே அறிவித்துவிட்டனர்.
அக் கட்சியுடன் கூட்டணி இல்லை என தெலுங்கு தேசமே அறிவிக்க இருந்த நிலையில் பாஜகவே முந்திக் கொண்டு விலகிவிட்டது.
மேலும் பாஜகவுடன் இணைந்து எந்தப் போராட்டங்களையும் தெலுங்கு தேசம் நடத்தத் தயாராக இல்லை. காஞ்சி சங்கராச்சாரியார் கைதுவிஷயத்தில் பாஜக பல போராட்டங்கள் நடத்தினாலும் அதில் பங்கேற்க தெலுங்கு தேசம் மறுத்துவிட்டது.
தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே பிளவு அதிகரித்து வருவதால், விரைவிலேயே இந்தக் கூட்டணி முடிவுக்கு வந்துவிடும் என்றுதெரிகிறது.