சென்னையில் மெட்ரோ ரயில்: ஜெ. அறிவிப்பு
சென்னை:
சென்னையில் 3 வழித் தடங்களில் பாதாள ரயில் (மெட்ரோ ரயில்) திட்டத்தை அமல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சென்னையின் மொத்த பரப்பளவு 1,177 சதுர கி.மீ. இதில் மைய நகர்ப் பகுதி 172 சதுர கிலோ மீட்டர். பெருநகரின் மக்கள் தொகை 70.4லட்சம். நகரின் மையப் பகுதியில் வசிப்பவர்கள் 43.4 லட்சம் பேர்.
1984ம் ஆண்டு நிலவரப்படி, சென்னை மாநகரில் 1.40 லட்சம் வாகனங்களே இருந்தன. ஆனால் 2004ல் இது 11 லட்சமாக அதிகரித்துவிட்டது.
வாகனங்கள் பெருகிய அளவுக்கு சாலைப் பரப்பு அதிகரிக்கவில்லை. நகரின் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில், சென்னை நகரசாலைகளின் பரப்பு 4 சதவீதமே உள்ளது. இதுவே லண்டன் நகரில் 14 சதவீதமாக உள்ளது.
போக்குவரத்து நெருக்கடியை சமாளிப்பதற்காக இரண்டு கட்டமாக பறக்கும் ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத் திட்டத்தைமேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் டெல்லியில் உள்ளதைப் போல சென்னை நகரிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்துடெல்லி மெட்ரோ ரயில் கழகத்திடம் ஆலோசனை கேட்கப்பட்டது.
அவர்கள் இதுதொடர்பாக ஆய்வு நடத்தி சென்னை நகரில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயிலை இயக்கலாம் என தெரிவித்துள்ளனர்.அதன்படி, திருவொற்றியூலிருந்து அண்ணா சாலை வழியாக சென்னை விமான நிலையம் வரையிலும் (தூரம் 31.54 கிலோமீட்டர்),
கடற்கரை முதல் கோயம்பேடு வரையில் ஒரு வழித்தடம் (தூரம் 13.54 கிலோமீட்டர்), திருவான்மியூலிருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைவரை ஒரு வழித்தடத்திலும் (தூரம் 21.68 கிலோமீட்டர்) மெட்ரோ ரயிலை இயக்கலாம் என பரிந்துரைத்துள்ளனர்.
இதில் முதல் மற்றும் 2வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை 2005ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டுக்குள் ரூ. 5,086 கோடி மதிப்பில்செயல்படுத்தவும், 3வது திட்டத்தை 2014ம் ஆண்டுக்குப் பின்னரும் செயல்படுத்தலாம் என்று டெல்லி மெட்ரோ ரயில் கழகம்தெரிவித்துள்ளது.
இந்த ரயில் பாதை பெரும்பாலும் தரைக்கடியிலும், சில இடங்களில் தரைக்கு மேல் சாலைகளின் மீது பாலம் அமைத்தும் உருவாக்கப்படும்.
முதல் மற்றும் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான விரிவான ஆய்வறிக்கையை தமிழக அரசுகோரியுள்ளது. இன்னும் 6 மாதங்களில் அந்த அறிக்கை கிடைக்கப் பெறும். அதன் பின்னர் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம்,நிதியாதாரத்தைத் திரட்டுவது உள்ளிட்டவற்றிற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்.
முதல் மற்றும் 2வது கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மூலம் 10 லட்சம் பயணிகள் பயனடைவர் என்றார் ஜெயலலிதா.