பெரும் வெள்ளத்தால் திசை மாறிய ஆறு!
கடலூர்:
விருதாசலத்தில் மிக பயங்கர வெள்ளப் பெருக்குடன் ஓடியயதால் வெள்ளாற்றின் போக்கே திசை மாறிவிட்டது தெரியவந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் விடாமல் பெய்த கன மழை காரணமாக வெள்ளாறு, மணிமுத்தாறு ஆகியவற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கரைகளை எல்லாம் உடைத்துக் கொண்டு ஆறுகள் ஊருக்குள் புகுந்தன. பல கிராமங்களை மூழ்கடித்தன.இதில் கருவேப்பிலங்குறிச்சி அருகே வெள்ளாற்றின் போக்கே (திசையே) மாறிவிட்டது இப்போது தெரியவந்துள்ளது. வெள்ளம் சற்று வடிந்து வரும் நிலையில், ஆறு சுமார் 300 மீட்டர் தூரத்துக்கு வேறு போக்கில் ஓடித் திரும்புகிறது. இதனால் அந்த 300 சதுர மீட்டர் பரப்பில் இருந்த விளை நிலங்கள், பட்டா நிலங்கள் ஆற்றுக்குள் மூழ்கிவிட்டன.
ஆற்றின் போக்கு மாறியதால் அந்தப் பகுதியில் அதற்கு புதிய கரைகளை அமைக்க கலெக்டர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து கிடைக்கும் உடல்கள்:
இதற்கிடையே கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. சிதம்பரம் அருகே திட்டகுடியில் 7பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கடலூர் பெண்ணையாற்றில் 5 பிணங்கள் கரை ஒதுங்கின.
வெள்ளத்தில் பல கிராமங்கள் மூழ்கிய நிலையில், இப்போது வெள்ளம் வடிய வடிய தொடர்ந்து உடல்கள் கிடைத்து வருகின்றன.
கடலூர் மாவட்டம் அருகே உள்ள உசூப்பூர் உப்பனாற்று கரையோரம் கண்ணன் (வயது 40) என்பவர் வசித்து வந்தார். அவரதுவீட்டை வெள்ளம் சூழ்ந்ததால் கண்ணனும், அவரது மனைவி ராணியும் சிதம்பரம் வந்து தங்கியிருந்தனர். இந்த நிலையில் தனதுவீட்டுப் பகுதியில் வெள்ளம் வடிந்து விட்டதா என்பதை பார்க்கச் சென்றார். அங்கு கழுத்தளவு தண்ணீரில் சிக்கி பலியானார்.
மேலும் சிதம்பரம் அருகே உள்ள பூ. மடுங்ககரை கிராமத்தை சேர்ந்த தங்கசாமி என்பவரது மனைவி ஜெயா (வயது 24),மஞ்சக்குழி காலனியை சேர்ந்த வீராசாமி மனைவி அஞ்சலை (வயது 60), பூண்டியாங்குப்பம் காலனியை சேர்ந்த முத்துவேல்(வயது 40) ஆகியோரும் வெள்ள நீரில் சிக்கி உயிரிழந்தனர். இவர்களது உடல் நீண்ட நாட்களுக்கு பின் கிடைத்துள்ளது.
கரை ஒதுங்கிய பிணங்கள்:
கடலூர் மாவட்டத்தில் கெடிலம் ஆறு, பெண்ணையாறு, மணி முத்தாறு, வெள்ளாறு, பரவனாறு உள்ளிட்ட ஆறுகளில் வரலாறுகாணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 100க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதுவரை 70 பிணங்கள்மீட்கப்பட்டு உள்ளன.
வெள்ளம் வடியத் தொடங்கிய நிலையில் பல இடங்களில் பிணங்கள் மிதந்து துர்நாற்றம் வீசுகின்றன. இந்த நிலையில்பெண்ணையாற்றில் முள்ளோடை அருகே 5 பேரின் சடலங்கள் கரை ஒதுங்கின.
இந்த பிணங்கள் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டன. இறந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்ற விவரம்தெரியவில்லை.
இதற்கிடையே திட்டக்குடியை அடுத்த முகாசபரூரை சேர்ந்தவர் சர்க்கரை என்கிற நெடுஞ்செழியன் (வயது 40) அதிமுகஉறுப்பினரான இவர் வெள்ளாற்றில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்டார். இந்த தகவல் அறிந்து உடனே சென்ற திட்டக்குடிதீயணைப்பு நிலைய அலுவலர் பெரியசாமி, வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கொண்ட குழு திட்டக்குடி அருகேவெள்ளாற்று பாலத்தில் சூழலில் சிக்கிக் கொண்டிருந்த அவரது உடலை மீட்டனர்.
இதே போல் பெலாந்துறை அணைக்கட்டில் 2 ஆண் பிணங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இதை அறிந்ததும் பெண்ணாடம் போலீசார்விரைந்து சென்று பிணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications