கல்யாண மண்டபத்தைக் காக்க கட்சியா?: விஜயகாந்த்துக்கு கோபம் வருது
தேனி:
சென்னையில் உள்ள எனது கல்யாண மண்டபத்தைக் காப்பற்றுவதற்காகவே நான் கட்சி ஆரம்பித்திருப்பதாக விஷமப் பிரசாரம்செய்வது கண்டனக்குரியது என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விஜயகாந்த், தேனியில் நடந்த கூட்டத்தில் பேசுகையில்,யாரோ ஒரு அம்மையாரின் (முதல்வர் ஜெயலலிதா) கடைக் கண் பார்வைக்காக நான் கட்சி நடத்துவதாக சிலர் கூறுகிறார்கள்.எனக்கு யாருடைய கடைக்கண் பார்வையும் தேவையில்லை. மக்களின் கடைக்கண் பார்வை மட்டும் போதும்.
இங்குள்ள ஒரு அரசியல் தலைவர்தான் (திமுக தலைவர் கருணாநிதி) தனது பேரனை வைத்து சோனியா காந்தி அம்மையாரின்கடைக்கண் பார்வைக்காக அரசியல் நடத்துகிறார்.
எனது கல்யாண மண்டபத்தை இடிக்கப் போவதாக கூறுபவர்கள் வீரப்பனைப் பார்க்க (கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க)சூட்கேஸ் வாங்கிய கதை மக்களுக்குத் தெரியாதா? கல்யாண மண்டபம் இடிபடுமே என்ற கவலையில் நான் கட்சிதொடங்கவில்லை.
நான் கொடுத்து பழக்கப்பட்டவன், எடுத்துப் பழக்கப்பட்டவன் அல்ல. அப்பா, தாத்தா வேடங்களில் நடித்து விட்டு கல்லாப்பெட்டியை நிரப்பிப் போட்டுக் கொண்டு நான் போயிருக்கலாம். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு மக்களுக்காக உழைக்கவந்துள்ளேன்.
நான் நடித்து இருக்கும் சுதேசி படத்தில், ரமணா படத்தில் கூறியதைப் போல பல நல்ல கருத்துக்களைச் சொல்லியுள்ளேன். அந்தப்படம் வெளியாகும் போது பலரின் எதிர்ப்புகளை சந்திக்கப் போகிறேன். ஆனால் எத்தகைய எதிர்ப்பையும் சந்திக்க நான்தயாராகவே இருக்கிறேன்.
இனிமேல் எனக்கு அரசியல் மட்டும்தான். இன்னும் இரண்டு படங்களில் நடித்து விட்டால் நான் 150 படங்களை தொட்டுவிடலாம் என சினிமா நண்பர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என என்னால் இருக்க முடியாது.
எதிர்க்கட்சிகள் இங்கு எதிரிக் கட்சிகள் போல செயல்படுகிறார்கள். ஆளுக்கொரு டிவியை வைத்துக் கொண்டு மாறி மாறிவசைபாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் சிந்தனை என்பதே இல்லை.
எனது கட்சியை தமிழகத்தில் 71வது கட்சி என்று பிரசாரம் செய்கிறார்கள். மக்கள் நினைத்தால் 71ல் உள்ள 7ஐ எடுத்து விட்ட 1 ஆகமாற்ற முடியும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள்தான் எதையும் முடிவு செய்ய வேண்டும். மக்கள் தீர்ப்பேமகேசன் தீர்ப்பு என்று வசனம் பேசினார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications