நெரிசலில் 42 பேர் பலியானதற்கு தமிழக அரசே முழுப் பொறுப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
டெல்லி:
சென்னை எம்ஜிஆர் நகரில் வெள்ள நிவாரண முகாமில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் பலியானதற்கு தமிழக அரசின்அலட்சியப் போக்கே முழுக்க முழுக்கக் காரணம் என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஏற்பட்ட கன மழையைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் நிவாரணம் வழங்குவதில் பெரும் குழப்பம் நிலவியது.பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் குதித்தனர்.இந் நிலையில் சென்னை வியாசர்பாடியில் நிவாரண முகாமில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாயினர். அதில் பாடம்படிக்காத மாநில அரசு நிவாரணம் வழங்குவதை முறைபடுத்தத் தவறியது.
இந் நிலையில் எம்.ஜி.ஆர் நகரில் வெள்ள நிவாரணக் கூட்ட நெரிசலில் 42 பேர் பலியாயினர். இதற்குப் பொறுப்பானஅதிகாரிகளை முதலில் இடமாற்றம் செய்த தமிழக அரசு திடீரென பழியை எதிர்க் கட்சிகள் மீது போட்டது.
குறிப்பாக மாநகராட்சி திமுக கவுன்சிலர் தனசேகரன் தான் வெள்ள நிவாரண டோக்கன் முன்னதாகவே வழங்கப்படுவதாக புரளிகிளப்பிவிட்டதாகவும், அதனால் தான் கூட்ட நெரிசலே ஏற்பட்டதாகவும் காரணத்தைச் சொல்லி அவரைக் கைது செய்தது.
இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார் தனசேகரன். அவரது மனு ஏற்கப்பட்டுநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
ஆனால், அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தது தமிழக அரசு. ஆனால், அங்கும் அவருக்கு ஜாமீன்வழங்கப்பட்டது. இந்த ஜாமீனையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்த தமிழக அரசு, திடீரென தனசேகரனை குண்டர்சட்டத்தில் பிடித்து உள்ளே போட்டுவிட்டது.
இந் நிலையில் தனசேகரனின் ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்குவந்தது. நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதி நோலேகர் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இதனை விசாரித்தது.
தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் கே.டி.எஸ். துள்சி (ஜெயேந்திரருக்கு எதிராக ஆஜரானவர்) ஆஜரானார். அவர் பேசுகையில்,தனசேகரன் போன்றவர்கள் கிளப்பிய புரளியால் தான் அந்த நெரிசல் சம்பவமே நடந்தது. இதனால் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
ஆனால் அவரை இடைமறித்த நீதிபதிகள், புரளி என்றால் என்ன?. எங்கிருந்து ஒரு தகவல் பரவியது என்பது தெரியாவிட்டால்தான் அது புரளி. இவர் தான் அப்படிச் செய்தார் என்று சொல்வது எப்படி புரளியாகும்.
அந்த நெரிசல் சம்பவத்துக்கு முழுக் காரணமே தமிழக அரசும், அதிகாரிகளும் தான். தமிழ்நாட்டில் நெரிசல் பலி நடந்திருப்பதுஇது முதன் முறையல்ல. ஏற்கனவே அது போன்ற ஒரு சம்பவம் சென்னையிலேயே (வியாசர்பாடி) நடந்திருக்கிறது.
சிறிய விஷயத்துக்காக இப்படிப்பட்ட நெரிசல் தமிழகத்தில் மீண்டும் மீண்டும் நடக்கிறது.
நிவாரணம் வழங்க முறையான ஏற்பாடுகளைச் செய்யாத தமிழக அரசும், அதிகாரிகளும் இந்தக் கொடூர சம்பவங்களுக்குக்காரணம் என்றனர் நீதிபதிகள்.
அப்போது பேசிய வழக்கறிஞர் துள்சி, தனசேகரனும் மற்றவர்களும் வதந்தி பரப்பியதற்கு சாட்சிகள் இருக்கின்றன என்றார்
இதையடுத்துப் பேசிய நீதிபதிகள், நடந்த எல்லாவற்றுக்கும் தனசேகரன் தான் காரணம் என்கிறீர்களா?. அரசுக்கு இதில்பொறுப்பில்லையா?. நடந்த சம்பவத்துக்கு முழுக்க முழுக்க தமிழக அரசின் அலட்சியப் போக்கு தான் காரணம்.
இதனால் தனசேகரனுக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை திருத்த வேண்டியதில்லை. அதில் இந்தநீதிமன்றம் தலையிடவும் போவதில்லை. ஜாமீனை ரத்து செய்யக் கோரும் தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யபடுகிறது எனதீர்ப்பளித்தனர்.
உச்ச நீதிமன்றமே ஜாமீனை ஓ.கே. செய்துவிட்டாலும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதால் தனசேகரனால் வெளியில்வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.