துபாயில் ஜமால் முகம்மது கல்லூரி விழா
துபாய்:
மத நல்லிணக்கம், ஒருமைப்பாட்டை வளர்க்கும் கலைக் கூடமாக திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி விளங்குவதாக துபாயில் நடந்த நிகழ்ச்சியில் புகழாரம் சூட்டப்பட்டது.
திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி சார்பில், முன்னாள் மத்திய அமைச்சரும், நெல்லை நாடாளுமன்ற உறுப்பினருமான தனுஷ்கோடி ஆதித்தன், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில சிறுபான்மைப் பிரிவு தலைவரும், ஜமால் முகம்மது முன்னாள் மாணவர்கள் சங்க சென்னை கிளையின் தலைவரும், இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பேரவையின் தலைவருமான அல்ஹாஜ் எஸ்.எம்.இதாயதுல்லா ஆகியோருக்கு துபாயில் வரவேற்பு அளிக்கப்பட்டது.துபாய் லேண்ட் மார்க் ஹோட்டலில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு, ஸ்கை குரூப் ஆப் நிறுவனங்களின் இயக்குனர் கீழக்கரை அல்ஹாஜ் செய்யது அப்துல் காதர் (சீனாதானா) தலைமை தாங்கினார். ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் அமீரக அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் வரவேற்புரையாற்றினார்.
இதாயதுல்லா ஏற்புரை நிகழ்த்துகையில், மத நில்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடு இவற்றினை வளர்க்கும் கலைக்கூடமாக திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி திகழ்கிறது.
முன்னாள் மாணவர் சங்கத்தின் சென்னை கிளை துவக்க விழா நடந்தபோது, முன்னாள் சட்டசபை துணை சபாநாயகர் ரஹ்மான்கான், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும், ஜி.கே.வாசன் தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் ரூபாயை கல்லூரி வளர்ச்சி நிதியாக வழங்கினார்.
இவர்கள் தவிர முன்னாள் மாணவர்களான ஐ.ஏ.எஸ். அதிகாரி இளங்கோவன், ஐ.பி.எஸ். அதிகாரி தங்கராஜ் ஆகியோர் தொடர்ந்து கல்லூரியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து உதவி வருகிறார்கள் என்றார்.
தனுஷ்கோடி ஆதித்தன் பேசுகையில், குறைந்தபட்ச கட்டண விமான சேவையின் (Budget Airlines) மூலம் விரைவில் தமிழக மக்களும் பயன் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதேபோல விரைவில் அமையவுள்ள புதிய தமிழக அரசில், வெளிநாடு வாழ் இந்தியர் நலனுக்கென புதிய துறை உருவாக்க முயற்சி எடுக்கப்படும் என்றார்.
அப்துல் கத்தீம் நன்றி கூறினார். ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஏ.லியாக்கத் அலி, கல்விக்குழு செயலாளர் ஏ.ஹம்மது தாஹா, தமிழ்நாடு பண்பாட்டுக் கழக தலைவர் ஏ.அஷ்ரஃப் அலி உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
(உங்கள் பகுதிகளின் நிகழ்ச்சிகளையும், பிற சம்பவங்களையும், நீங்கள் எழுதவிரும்பும் எந்த தகவலையும் வாசகர்கள் அனுப்பலாம். அவற்றை இலவசமாய்பிரசுரிக்கத் தயாராய் இருக்கிறது தட்ஸ்தமிழ். தமிழ், ஆங்கிலத்தில் உங்கள்படைப்புகளை இ-மெயில் மூலம் அனுப்பலாம். தமிழில் அனுப்பும்போது நீங்கள்பயன்படுத்தும் font பெயரைக் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: [email protected])