குற்றால அருவிகளில் வெள்ளம்-வைகையிலும்..
தென்காசி:கன மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் மிகவும்அபாயகரமான அளவில் தண்ணீர் வெள்ளமென கொட்டி வருகிறது.
தென் மாவட்டங்களான மதுரை, தேனி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலிஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தொடர் மழை காரணமாக இம் மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள்,கண்மாய்கள், அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பல ஆறுகளில் வெள்ளப்பெருக்க ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், பாபநாசம்,குண்டாறு, அடவிநயினார், கருப்பாநதி, ராமநதி, கடனா நதி ஆகிய அணைகள் நிரம்பிவிட்டன.
குற்றாலத்தில் பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள மெயின் அருவியில்இதுவரை இல்லாத அளவுக்கு பயங்கர வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குளிக்கும்பகுதியில் உள்ள ஆர்ச்சைத் தாண்டி பாலத்தையும் தாண்டி வெள்ளம் திமுதிமுவெனகொட்டிக் கொண்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் கடைகள் போட்டிருந்த வியாபாரிகள், குளிக்க வந்த சுற்றுலாப்பயணிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். குளிப்பதற்கு போலீஸார் தடைவிதித்துள்ளனர். வெள்ளத்தில் மரக் கிளைகள், கற்பாறைகளும் வந்து விழுவதால்அருகே நின்று வேடிக்கை கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ள நீர் அப்படியே அருகில் உள்ள சன்னதி பஜார், குற்றாலநாதர்கோவிலுக்குள்ளும் பாய்ந்து வருகிறது. சோமலிங்கர் சன்னதி, சிவாலய முனிவர்சன்னதிக்குள் வெள்ள நீர் பாய்ந்துள்ளது. இதனால் கோவிலில் பக்தர்கள் நுழையமுடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து கோவிலுக்குள் புகுந்த தண்ணீரை வேகமாக வெளியேற்றும் பணி நடந்துவருகிறது. ஐந்தருவியிலும் வெள்ளப் பெருக்கு காணப்படுகிறது. குற்றாலத் தண்ணீர்கலக்கும் சிற்றாறிலும் வெள்ளப் பெருக்க ஏற்பட்டுள்ளது.
தென்காசி மேலவாலிபன் பொத்தை என்ற இடத்தில் நரிக்குறவர் குடியிருப்புகளில்தண்ணீர் புகுந்தது. இதனால் அவர்கள் போட்டிருந்த கூடாரங்களும், உள்ளே இருந்தபொருட்களும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலும்தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூருக்குள்வெள்ளம் புகுந்தது. கிட்டத்தட்ட 5,000 வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இப்பகுதியில்உள்ள கண்மாய்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன.
தொடர்ந்து மழை பெய்தால் அத்தனை கண்மாய்களும் உடைந்து விடும் அபாயம்ஏற்பட்டுள்ளது. இந்த கண்மாய்களிலிருந்து தண்ணீரைத் திறந்து விட்டு உடைப்பைத்தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கண்மாய்களிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை நகராட்சித் தலைவர் சுந்தரி உள்ளிட்டோர் பார்வையிட்டுமீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர். கண்மாய்க் கரைகளை பலப்படுத்த ஏராளமானமண் மூட்டைகள் போட்டு பலப்படுத்தி வருகின்றனர்.
வைகையில் மீண்டும் வெள்ளம்:
இதற்கிடையே வைகை அணையிலிருந்து கூடுதல் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து மதுரை உள்ளிட்ட 5 தென் மாவட்ட வைகைக் கரையோரப் பகுதிமக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வைகை அணை ஏற்கனவே நிரம்பியுள்ளது. சில நாட்களுக்கு முன் வரைஅணையிலிருந்து திறந்து விடப்பட்டு வந்த நீர், மழை குறைந்ததால்குறைக்கப்பட்டது. வெள்ள அபாயமும் நீங்கியது. இந் நிலையில் வருசநாடு,கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, போடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவுவிடிய விடிய கன மழை பெய்தது.
இதனால் வெள்ளிமலை அருவி, மேகமலை அருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் அணைக்கும் கூடுதலாக நீர் வரத் தொடங்கியது. நேற்றுநள்ளிரவு மட்டும் வைகை அணைக்கு வினாடிக்கு 21,000 கன அடி நீர் வந்தது.இதைத் தொடர்ந்து அணைக்கு வந்த நீர் அப்படியே திறந்து விடப்பட்டது.
கூடுதல் நீர் திடீரென திறந்து விடப்பட்டதால் வைகை அணையில் வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது. கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குஅப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மீட்புப் படையினர் தயார் நிலையில்வைக்கப்பட்டுள்ளனர். குளிக்கவும், துணி துவைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.