துரைமுருகன் மீது ராமதாஸ் மீண்டும் பாய்ச்சல்
விழுப்புரம்:காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு ஆகிய நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் தமிழகத்தை ஆண்ட கட்சிகள் ஆர்வம் காட்டதாததால் தற்போது தமிழகம் பாலைவனமாக மாறிக் கொண்டு வருகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தைலாபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது,
காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு ஆகிய நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் தமிழகத்தை ஆண்ட கட்சிகள் ஆர்வம் காட்டதாததால் தற்போது தமிழகம் பாலைவனமாக மாறிக் கொண்டு வருகிறது. இப்பிரச்சனையில் மூன்று மாநில முதல்வர்களையும் பிரதமர் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும். இதில் காலதாமதம் ஏற்படக் கூடாது.
பாலாற்றின் குறுக்கே அணை காட்டினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட வராது. இதுவரை தமிழகத்தை ஆண்ட கட்சிகள் நதி நீர் பிரச்சனை குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேட்கிறேன். இன்றைய காலக் கட்டத்தில் தமிழ்நாடு மிக இக்கட்டான நிலையில் உள்ளது.
இந்த மூன்று பிரச்சனைகளிலும் தமிழகத்திற்கு பாதகம் ஏற்பட்டால் மாநிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு மாவட்டங்கல் கடுமையான நீர் நெருக்கடியை சந்திக்கும். விவசாயத் தொழில் நலிவடைந்து விடும். குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்தாடும். இந்த மூன்று பிரச்சனைகளிலும் தமிழகத்திற்குச் சாதகமான நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தங்கள் இருக்கின்றன.
காவிரி பிரச்சனையில் 1892 மற்றும் 1924ம் ஆண்டு ஒப்பந்தங்கள், பெரியாறு பிரச்சனையில் 1886 ஆண்டு ஒப்பந்தம். பாலாறு பிரச்சனையில் 1892ம் ஆண்டு ஒப்பந்தம். இந்த மூன்று நதிநீர் பிரச்சனைகளிலும் நமக்கு கேடயமாக இந்த ஒப்பந்தங்கள் இருக்கின்றன. ஆனாலும் கேடயத்தை பயன் படுத்தி தமிழகத்தை பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.
இதுதான் உண்மை நிலைமை. உண்மை கசக்கத்தான் செய்யும். ஆனாலும் உண்மையை எடுத்துச் சொல்லமால் இருக்கவும் முடியாது. இந்த உண்மைகளை யாராலும் மறைக்க முடியாது. இந்த ஆபத்தில் இருந்து தமிழகத்தை மீட்பது எப்படி? இரண்டு ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்குகிடையே ரவி-பியாஸ் நீர்ப் பங்கீட்டு பிரச்சனை ஏற்பட்டது.
அப்போது ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ரஜே சிந்தியா, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு பிரதமரைச் சந்தித்து, நீர்ப் பிரச்சனைகளை எடுத்துக் கூறி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வற்புறுத்தினர்.
இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்துடன் நீர்ப் பங்கீட்டில் தகராறு உள்ள மாநில முதல்வர்களை அழைத்து பேசி தீர்வு காண்பதாக பிரதமர் உறுதியளித்தார். அதன்படி மாநில முதல்வர்களை அழைத்து பேசி பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காணப்பட்டது. அது போல ஒரு அணுகுமுறையை தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
அண்டை மாநிலங்கள் மூன்றுடன் நமக்கு பிரச்சனை இருக்கிறது. எனவே புதுச்சேரி மாநில முதல்வரும், தமிழக முதல்வரும் இரு மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துக் கொண்டு பிரதமரை சந்தித்து நீர் பற்றாக்குறையையும், அதன் விளைவாக தமிழகத்திற்கு வர இருக்கும் ஆபத்தையும் எடுத்துக் கூறி இந்தப் பிரச்சனைகளில் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும்.
கடந்த சில தினங்களுக்கு முன் இது தொடர்பாக நான் தெரிவித்த கருத்துகளுக்கு அமைச்சர் ஒருவர் (துரைமுருகன்) சட்டபேரவையில் 110வது விதியின் கீழ் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார். என்னுடைய குற்றச் சாட்டுகளை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்கிறார். மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? இல்லையா? என்பது போகப் போகத் தெரியும் என்றார் ராமதாஸ்.