தயாநிதிக்கு எதிராக அணி திரளும் கருணாநிதிகுடும்பம்: பதவி பறிக்கப்படுகிறது?!
சென்னைஅழகிரி-மாறன் குடும்பத்தினர் இடையே ஏற்பட்டுள்ள மோதலையடுத்து தயாநிதி மாறனின் மத்திய அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்று தெரிகிறது.
அதே போல பதவியை தூக்கி எறிய தயாநிதியும் தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
மதுரை வன்முறை திமுக மற்றும் கருணாநிதி குடும்பத்தில் பல முக்கிய நிகழ்வுகளுக்கு பிள்ளையார் சுழி போல அமைந்து விட்டது. அடுத்தடுத்து பல திருப்புமுனை நிகழ்ச்சிகளுக்கு அது அடிக்கல் நாட்டியுள்ளது.
இவ்வளவு பிரச்சனைகள் நடந்த பின்னரும் அழகிரிக்கு முதல்வர் கருணாநிதி முழு ஆதரவு தருவதாக தயாநிதியும் அவரது அண்ணனும் சன் டிவி நிறுவனருமான கலாநிதியும் கருதுகின்றனர்.
இதனால் அழகிரி மீது கருணாநிதி நடவடிக்கை எடுக்க மாட்டார் என்றே அவர்கள் நினைக்கின்றனர்.
இந் நிலையில் கருணாநிதியை சந்தித்துப் பேசிய அழகிரி, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதியை நீக்குமாறு வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
அழகிரியின் இந்தக் கோரிக்கைக்கு கருணாநிதி குடும்பத்திலும் ஆதரவு வலுத்துள்ளதாம்.
தயாநிதி மாறன் முதுகில் குத்தி விட்டார், கலைஞருக்கு துரோகம் செய்து விட்டார் என்று ஒட்டுெமாத்த கருணாநிதி குடும்பமும் கொந்தளித்துக் கிடக்கிறதாம்.
கலைஞர் மற்றும் திமுகவை வைத்து பல பலன்களை அனுபவித்தவர்கள் மாறன் சகோதரர்கள். ஆனால் இன்று கலைஞரையே தூக்கி எறியத் துணிந்து விட்டனர்.
அப்படிப்பட்டவர்களுடன் நமக்கு ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் என்று அழகிரி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கோபமாக கருணாநிதியிடம் கூறியுள்ளனராம்.
அழகிரியின் ேகாரிக்கையை திமுக முன்னணியினரும் வரவேற்றுள்ளனராம். காரணம் தயாநிதியின் வருகையை ஆரம்பத்திலிருந்தே விரும்பாதவர்கள் இவர்கள்.
தயாநிதியின் அசுர வளர்ச்சியால் அவர் மீது எரிச்சலில் உள்ள இந்த திமுக முக்கிய தலைகளும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு கருணாநிதியை நெருக்கி வருகின்றனர்.
குறைந்த பட்சம் அவரது இலாகாவையாவது மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
இந்த வற்புறுத்தல்களால் தயாநிதியை பதவியை விட்டு விலகுமாறு கருணாநிதி கோரலாம் என்று தெரிகிறது.
அழகிரி விவகாரம் தொடர்பாக கருணாநிதியை சந்திக்க தயாநிதி எடுத்த முயற்சிகள் பலனிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் கருணாநிதியின் பொன்விழா பொதுக் கூட்டத்தை தயாநிதி புறக்கணித்தார் என்கிறார்கள்.
மேலும் இதே காரணத்தில் தான் கருணாநிதியின் பொன் விழா நிகழ்ச்சிகளைக் கூட சன் டிவி நேரடியாக ஒளிபரப்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப சன் டிவிக்கு கருணாநிதியே அனுமதி மறுத்ததாகவும் ஒரு தகவல் உள்ளது.
இதனால் இந்த நிகழ்ச்சியையும் காலையில் சட்டமன்றத்தில் நடந்த பொன் விழா நிகழ்ச்சியையும் ராஜ் டிவி தான் நேரடியாக ஒளிபரப்பியது.
இதனால் கருணாநிதியின் பொன் விழா சன் டிவி செய்தியில் 4வது செய்தியாகத் தான் இடம் பெற்றது.
இந் நிலையில் இனி ஆட்சி, கூட்டணி தொடர்பான எந்த முக்கிய விஷயங்களையும் தயாநிதியிடம் தெரிவிக்க வேண்டாம், அதை டி.ஆர்.பாலுவிடம் சொன்னால் போதும் என பிரதமரிடமும் சோனியாவிடமும் கருணாநிதி கூறியுள்ளதாகவும் தெரிகிறது.
இதனால் தயாநிதி தானாகவே பதவி விலகுவார் அல்லது பதவி விலகுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார் என்று திமுகவில் பலமாகவே கிசுகிசுக்கிறார்கள்.
மதுரை வன்முறைக்குப் பிறகு மாறன் குடும்பத்தினர் யாரும் கருணாநிதி வீட்டுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.