மதுரை இடைத் தேர்தல்-காங்.கில் போட்டா போட்டிகட்சியினருடன் விஜய்காந்த் ஆலோசனை
மதுரை:மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ், தேமுதிக கட்சியினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இத் தொகுதியில் வரும் ஜூன் 26ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மனு தாக்கல் வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. மனு தாக்கலுக்கு கடைசி நாள் ஜூன் 8 ஆகும்.
திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி விண்ணப்ப கட்டணம் பெறாமல் நிர்வாகிகளிடம் அவர்களது பயோ-டேட்டாவை விண்ணப்பமாக பெற்று வருகிறது.
மதுரை நகர காஙகிரஸ் தலைவர் தெய்வநாயகம், துணைத் தலைவர் ராஜேந்திரன், மேற்கு தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட பெருமாள், மாநில செயலாளர் காந்தி உள்பட பலர் சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
அதே போல சீட்டை பிடிக்க தேமுதிகவிலும் கடும் போட்டி நிலவுகிறது. மாவட்டச் செயலாளர் ராஜா, நகரச் செயலாளர் ராமர், வடக்கு மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், அவைத் தலைவர் கவியரசு, துணை செயலாளர் சிவமுத்துக்குமார், நெசவாளர் அணி செயலாளர் நாகராஜன், செய்குழு உறுப்பினர் முஜிபுர் ரகுமான், வழக்கறிஞர் சண்முகராஜன் ஆகியோர் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இத் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட மணிமாறன் 14,000 ஓட்டுக்களை பெற்றார். இந்த முறை காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் யார் என்பதை அறிவித்த பின் தனது கட்சி வேட்பாளரை அறிவிக்க விஜய்காந்த் முடிவு செய்துள்ளார். இதற்காக ஜூன் 5ம் தேதி மதுரையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.