மதுரை மேற்கு- புகுந்து விளையாடும் பணம்வீடு தேடி வரும் ரூ. 1,500- காது குத்தி காசு
மதுரை:மதுரை மேற்குத் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதாக திமுகவும், அதிமுகவும் பரஸ்பரம் புகார் கூறியுள்ளன.
மதுரை மேற்குத் தொகுதியில் நேற்று மாலை வாக்காளர்களுக்கு வீடு வீடாக போய் பணம் கொடுக்கப்படுவதாக தகவல் பரவியது.
கவரில் ரூ. 1,500 போடப்பட்டு வீடு வீடாகச் சென்று திமுகவினர் அதை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. அதே போல வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு ரூ. 100 ரூபாய் சலவைத் தாள்களும் கைகளில் திணிக்கப்படுகின்றன.
இந் நிலையில் நகர் மாவட்ட அதிமுக செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் தேர்தல் பார்வையாளர் அஜய் தியாகியிடம் சென்று புகார் கொடுத்தனர்.
தங்களது புகார் மனுவில் திமுகவினரும், காங்கிரஸாரும் வாக்காளர்களை வீடு தேடிச் சென்று சந்தித்து வாக்காளர்களுக்கு ரூ. 1,500 வரை பணம் கொடுத்து வருகின்றனர். கவரில் வைத்து இந்தப் பணம் கொடுக்கப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கு ஆதாரமாக கவரில் வைக்கப்பட்டிருந்த பணத்தையும் அஜய் தியாகியிடம் அதிமுகவினர் கொடுத்தனர்.
தேர்தல் பார்வையாளர் தங்கியிருந்த அரசு சுற்றுலா மாளிகை முன்பு அதிமுகவினர் பெருமளவில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவர்கள் போன திமுக மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி தலைமையில் திமுகவினர் திரண்டு வந்தனர். அவர்கள் அதிமுகவினர், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக புகார் அளித்தனர். அந்தப் புகாரில், மதுரை மேற்குத் தொகுதி தேர்தல் பிரசாரத்திற்காக முன்னாள் அமைச்சர்கள் வ.து.நடராஜன், தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் மதுரையில் முகாமிட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை இவர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தனர். தொடர்ந்து பணம் கொடுத்து வருகின்றனர். இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இரு தரப்பு புகார்களையும் பெற்றுக் கொண்ட தேர்தல் பார்வையாளர் தியாகி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தார்.
இதற்கிடையே வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக செல்லூர் பகுதியில் உள்ள கல்யாண மண்டபங்களில் செட்டப் காது குத்து விழாக்களை அதிமுகவினர் நடத்தி வருவதாக திமுகவினர் புகார் கூறியுள்ளனர்.
இந்த காது குத்து விழாக்களுக்கு வாக்களர்களை வரவழைத்து சாப்பாடு போட்டு, கையில் பணம் திணிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர் திமுகவினர்.
இந்நிலையில் மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் நடக்க சில நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரம் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது.
முதல்வர் கருணாநிதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரனுக்கு ஆதரவு திரட்ட 23ம் தேதி மதுரை வருகிறார். செல்லூர் 60 அடி சாலையில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அவருடன் கூட்டணி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். வரும் 21ம் தேதி நடிகர் பாக்யராஜ் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, செல்லூர் ராஜூக்கு ஆதரவு திரட்ட 21ம் தேதி 2 நாள் பயணமாக மதுரை வருகிறார். இவருடன் வைகோவும் கலந்து கொள்கிறார். மறுபடியும் 24ம் தேதி மதுரை வரும் அவர் வீதி வீதியாக ஆதரவு திரட்டுகிறார்.
இதே தேதிகளில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் ஸ்டாலினும் 22, 24 தேதிகளில் மதுரையில் போட்டி பிரச்சாரம் செய்கிறார். ஒரே நாளில் ஸ்டாலினும் ஜெயலலிதாவும் 24ம் தேதி இறுதிக் கட்ட பிரச்சாரம் செய்ய இருப்பது தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை தந்தாலும் போலீசுக்கும் ெபாது மக்களுக்கும் பீதியைக் கொடுத்துள்ளது.
மத்திய அமைச்சர் வாசனும், தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியும் வரும் 20ம் தேதி மதுரையில் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.












Click it and Unblock the Notifications