தொடரும் ரயில்வே குளறுபடி-பயணிகள் மறியல்: கல்வீச்சு- போலீஸ் தடியடி
சென்னை:சென்னை கடற்கரையிலிருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயில் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் கடற்கரை ரயில் நிலையத்தில் போராட்டத்தில் குதித்தனர். கல்வீச்சுத் தாக்குதலிலும் ஈடுபட்டனர். அவர்களை ரயில்வே போலீஸார் தடியடி நடத்திக் கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மின்சார ரயில் போக்குவரத்தில் தெற்கு ரயில்வே பெரும் குளறுபடிகளைச் செய்து வருகிறது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஏற்கனவே ரயில்கள் போதிய அளவில் இல்லாததால் தினசரி ரயில் பயணத்தை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான பயணிகளும் பெரும் அவதியுடன் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பல்வேவறு ரயில்களை பாஸ்ட் ரயில்களாகவும், சில ரயில்களின் நேரத்தை மாற்றி அமைத்தும் பயணிகளின் வெந்த புண்ணில் வென்னீர் ஊற்றி வேடிக்கை பார்க்கிறது ரயில்வே.
ரயில் நேரங்கள் மாற்றப்பட்டதை கண்டித்து அரக்கோணம், ஆவடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சமீபத்தில் 3 முறை பயணிகள் மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ரயில் நேரங்களின் மாற்றம் பழைய நேரத்திற்கே மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது.
இந்த நிலையில் மறுபடியும் ஒரு குழப்பத்தை செய்துள்ளது ரயில்வே. சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து திருத்தணிக்கு ஒரு மின் ரயில் இயக்கப்படுகிறது. சமீபத்தில் இது நிறுத்தப்பட்டு விட்டது. அதற்குப் பதிலாக, மேல்மருவத்தூரிலிருந்து கடற்கரை வழியாக திருத்தணிக்கு ஒரு ரயில் விடப்படும் என அறிவிக்கப்பட்டது.
ரயில்வேயின் இந்த அறிவிப்பால், பயணிகள் பெரும் கொதிப்படைந்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு ரயிலில் இடம் கிடைக்காததால், கடற்கரை ரயில் நிலையத்தில் பயணிகளில் மறியல் நடத்தினர். நேற்று இரவும் இதுபோல மறியல் நடந்தது.
கடற்கரை ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு வரும் ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன.
பயணிகள் போராட்டத்தால், ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையிலும், எந்த அதிகாரியும் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை. இந்த நிலையில் போராட்டம் நடத்திய இடத்தில் அதிக அளவில் ரயில்வே போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இரவு எட்டரை மணிக்கு பயணிகள் அவர்களாகவே போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். ஆனால் சென்டிரல் ரயில் நிலையத்தில் போராட்டம் வெடித்தது. அரக்கோணம் செல்ல வேண்டிய ரயில் உரிய நேரத்தில் வரவில்லை. இதனால் அந்த ரயிலுக்காக காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகளும் ஆத்திரமடைந்தனர்.
ரயில் எப்போது வரும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பயணிகள் கேட்டபோது அவர்கள் அலட்சியமாக பதிலளித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், அந்த வழியாக கும்மிடிப்பூண்டிக்குக் கிளம்பிய ரயிலை மறித்துப் போராட்டத்தில் குதித்தனர். கல்வீச்சுத் தாக்குதலிலும் ஈடுபட்டனர்.
மேலும் சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் முன்பும் பயணிகள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் சென்டிரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக வரவழைக்கப்பட்ட ரயில்வே போலீஸார், பயணிகள் மீது தடியடி நடத்தத் தொடங்கினர். இதனால் பயணிகள் பீதியமடைந்து அங்குமிங்கும் ஓடியதால் பெரும் களேபரமாக காணப்பட்டது.
பயணிகளை இப்படி வேதனைப்படுத்தி வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபத்துடன் பயணிகள் குமுறியபடி சென்றனர்.












Click it and Unblock the Notifications