நான் சொல்லிட்டேன்.. இப்ப நீங்க சொல்லுங்க-ஜெ
சென்னை:முதல்வர் கருணாநிதி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்லி விட்டேன். ஆனால் நான் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் அவர் பதில் சொல்லாதது ஏன் என்று அதிமுக பொதுச் செயலாளர் கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
நான் முதல்வராக இருந்தபோது தலைமைச் செயலகத்திற்கு நான் வருவதே அதிசயம் என்று பொய்யான செய்தியைக் கூறியுள்ளார் கருணாநிதி. 2001ம் ஆண்டு முதல் 2006 வரை மெய் வருத்தம் பாராமல், கால நேரம் பாராமல், பசி நோக்காமல் பணியாற்றினேன்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தியுள்ளேன். இது பத்திரிக்கையாளர்களுக்கும், தொலைக்காட்சி நிருபர்களுக்கும் தெரியும்.
கருணாநிதி காலி செய்து விட்டுப் போன கஜனாவை சரி செய்யவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் சலியாமல் உழைத்ததால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 8,000 கோடி வருமானம் கிடைத்தது.
தினசரி தலைமைச் செயலகம் வருவதாக கூறும் கருணாநிதி அங்கு சில நிமிடங்கள்தான் இருக்கிறார். புகைப்படங்கள் எடுத்தவுடன், வீடியோ எடுத்தவுடன் கிளம்பி விடுகிறார். ஆடல் பாடல் கேலிக் கூத்துக்களில் நேரத்தை செலவிடுகிறார். மட்டரக கவிதைகளையும், அறிக்கைகளையும் எழுதி நேரத்தைக் கழிக்கிறார்.
இவர் எழுதும் கவிதைகள், அறிக்கைகள், தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டு அவரே பதிலையும் அளிக்கும் அறிக்கைகளையும் பத்திரிக்கைகள் எப்படித்தான் வெளியிடுகின்றனவோ?
கர்ம சிரத்தையோடு நான் பணியாற்றதற்கு தமிழக அரசின் செய்தித் துறையிலேயே ஆதாரங்கள் உள்ளன.
கருணாநிதி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்லி விட்டன். நான் கேட்ட கேள்விகளுக்கு கருணாநிதி இன்னும் பதில் சொல்லவில்லை.
எம்.பி. தேர்தலில் பணம் பெற்றுக் கொண்டு கட்சிக்காரர்களுக்கு சீட் கொடுத்தார் கருணாநிதி என்று மறைந்த ஆலடி அருணா கூறிய புகார் குறித்து விளக்கம் தர வேண்டும் என நான் கேட்ட கேள்விக்கு இன்னும் கருணாநிதி பதிலளிக்கவில்லை. அது ஏன் என்பதை கருணாநிதி விளக்க வேண்டும்.
நான் எந்த சந்தர்ப்பவாத செயலிலும் ஈடுபடவில்லை. எனவே கருணாநிதி கூறியபடி நான் திருந்த வேண்டிய அவசியம் இல்லை.
அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருந்தபோது, பாஜகவினரை பண்டாரம், பரதேசி என்றார் கருணாநிதி. ஆனால் அடுத்த வருடமே பாஜகவுன் கூட்டணி வைத்து ஐந்து ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி லாபம் அடைந்தார் கருணாநிதி.
முரசொலி மாறன் இறந்தபோது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சென்னைக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். மயானம் வரை வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். ஆனால் அவர் டெல்லி போய்ச் சேருவதற்குள் கருணாநிதி கூட்டணியை முறித்துக் கொண்டார். எனவே கருணாநிதிதான் பச்சை சந்தர்ப்பவாதி.
இப்போது பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் சூழ்நிலை உருவானால் உடனடியாக அவர்களிடம் சென்று சரணாகதி அடைய கூச்சப்படாதவர்தான் கருணாநிதி.
குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து முடிவெடுப்பது அதிமுகவின் உட்கட்சி விவகாரம். அதுகுறித்து கேள்வி கேட்க, கருணாநிதிக்கு உரிமையும், தகுதியும் இல்லை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications