தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் மீண்டும் சோதனை
சென்னை:கூடுதல் கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் இன்றும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சமீபத்தில் சில சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் தமிழக அரசு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் உள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனைக் குழுக்களில் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டண விவரம், தினசரி வரவு செலவுக் கணக்கு, மாணவர் சேர்க்கைக் கட்டண ரசீது, அடிப்படைக் கட்டமைப்பு வசதி உள்ளிட்ட அனைத்து விவரங்கள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகள், மதுரை, கோவை, சேலம், நாமக்கல், தர்மபுரி, சிவகங்கை, விருதுநகர், ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் சோதனை நடந்து வருகிறது.
தேவைப்பட்டால் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications