கடலூர் பாமக-விடுதலை சிறுத்தைகள் பயங்கர மோதல்
கடலூர்:விடுதலை சிறுத்தைகளுக்கும், பாமகவினருக்கும் கடலூரில் இன்று பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனால் கடலூர் முழுவதும் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவனின் பிறந்த நாள் கடலூரில் நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி கடலூரில் நேற்று தமிழர் எழுச்சி மாநாடு நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொள்வதற்காக நேற்றிரவு கடலூர் டவுன்ஹால் ரோட்டின் வழியாக அக் கட்சியினர் கார்களில் சென்றனர். டவுன்ஹால் ரோட்டில் தான் பாமக அலுவலகம் உள்ளது. இந்த பகுதியின் வழியாக சென்ன விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்கள் பாமக அலுவலகத்தில் நுழைந்து, அலுவலகத்தை சூறையாடினர்.
அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்கள், டிஜிட்டல் போர்டுகள், நாற்காலிகள் என அனைத்தும் நொறுக்கப்பட்டன. அங்கிருந்த பாமக தொண்டர்கள் மீதும் கல் வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதில் பாமக விவசாய அணி செயலாளர் சந்திரகாசு காயம் அடைந்தார்.
பாமக அலுவலகம் தாக்கப்பட்ட செய்தி தீயாக பரவியதையடுத்து கடலூரில் இரவோடு இரவாக பல இடங்களில் பாமகவினரும், விடுதலை சிறுத்தைகள் அமைப்பினரும் மாறி மாறி வன்முறையில் ஈடுபட்டனர்.
விடுதலைச் சிறுத்தைகளின் தமிழர் எழுச்சி மாநாட்டுக்காக வைக்கப்பட்ட பேனர்களை பாமகவினர் கிழித்து எறிந்தனர். இதைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் 50 பேர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந் நிலையில் இந்த தமிழர் எழுச்சி மாநாட்டில் கலந்து கொள்ள விடுதலைச் சிறுத்தைகள் எம்எல்ஏ செல்வப் பெருந்தகை தனது ஆதரவாளர்களுடன் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது 40க்கும் மேற்பட்ட பாமகவினர் முதுநகர் காரைக்காடு அருகே வழிமறித்து பயங்கர ஆயுதங்களோடு தாக்க ஆரம்பித்தனர்.
இந்த தாக்குதலில் செல்வ பெருந்தகை உயிர் தப்பினார். விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் தமிழ் அன்பன் உட்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
மேலும் கடலூர் முதுநகரில் வைக்கப்பட்டிருந்த விடுதலை சிறுத்தைகள் பேனரை நள்ளிரவு யாரோ கிழித்து விட்டனர். இதனால் இன்று காலை அப்பகுதியில் கடும் பதட்டம் நிலவியது.
பாமக-சிறுத்தைகள் மோதலால் கடலூரில் இரவில் பேருந்துகள் இயங்கவில்லை. இன்று காலை 7 மணிவரை கடைகள் திறக்கப்படவில்லை.
கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே விடுதலை சிறுத்தைகள் பேனரை யாரோ தீ வைத்துவிட்டனர். இதனால் மஞ்சக்குப்பம் பகுதியிலும் கடும் பரபரப்பு நிலவியது.
இந்த சம்பவங்களையடுத்து கடலூர் ஏடிஎஸ்பி ஸ்டீபன் ஏசுபாதம் இரு தரப்பினருடன் பேச்சு நடத்தினார். இதையடுத்து கடலூரில் வைக்கப்பட்டிருந்து பாமக, விடுதலை சிறுத்தைகளின் கொடிகள், பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டன.
தொடரும் பதட்டம்
ஒரே கூட்டணியில் இருக்கும் பாமக-விடுதலை சிறுத்தைகள் அமைப்பினரிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதலால் கடலூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது.
கடலூர் டவுன்ஹால் ரோட்டில் உள்ள பாமக அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications