தென் மாவட்ட என்ஜீனியரிங் கல்லூரிகளில் புதிய ஆய்வுப் படிப்புகள் - துணைவேந்தர்
திருநெல்வேலி:
தென் மாவட்ட என்ஜீனியரிங் கல்லூரிகளில் விரைவில் பல்வேறு பிரிவுகளில் புதிய ஆய்வுப் படிப்புகள் தொடங்கப்படும் என நெல்லை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் காளியப்பன் கூறியுள்ளார்.
நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக எஸ்.காளியப்பன் நேற்று பொறுப்பேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தென் மாவட்டங்களில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வி கிடைக்க வகை செய்யப்படும்.
புதிதாக சுற்றுசூழல், கடல்இயல், கனிமவளம், மரபுசாரா எரிசக்தி ஆகிய பிரிவுகளில் ஆய்வுப் படிப்புகள் தொடங்கப்படும்.
இதன் முலம் இப்பகுதியில் ஏற்படும் கடல் மாற்றங்கள், சுனாமி, மீன்வளம், சுற்றுசூழல் காரணமாக ஏற்படும் மாற்றங்கள், கனிம வளத்தில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ள முடியும்.
மேலும் பொதுமக்களுக்கும், கடல், கனிம தொழில்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் இது உதவும்.
சுயநிதி கல்லூரிகளில் அதிகளவில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவது, மாணவர்களுக்கு போதுமான வகுப்பறைகள் மற்றும் விடுதிகளில் வசதிகள், லேப் வசதிகள் ஆகியவை குறைவாக இருப்பது, போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பது போன்ற குற்றசாட்டுகள் அதிகளவில் உள்ளன.
இவ்வாறு நடந்து கொள்ளும் கல்லூரிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மீது விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.