சேது சமுத்திர திட்டம்-கருணாநிதிக்கு வைகோ சவால்!
கரூர்:
சேது சமுத்திர திட்டம் பற்றி கருணாநிதி எந்த பிரதமரிடமாவது பேசியது உண்டா?, அல்லது கோரிக்கை மனுவாவது கொடுத்து உண்டா? அதை நிரூபிக்க தயாரா. அப்படி அவர் நிரூபித்து விட்டால் நான் பொது வாழ்க்கையிலிருந்தே விலகி கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
கரூரில் நேற்று நடந்த மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த வைகோ பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திமுக கூட்டணி கட்சிகள் கடந்த அக்டோபர் 1ம் தேதி நடத்திய பந்த் தேவையற்றது.
அதனால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறித்தான் அதிமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சில நிபந்தனைகளின் பேரில் தான் அனுமதி வழங்கப்பட்டது. அதனால் உடனே அதிமுக உச்ச நீதிமன்றத்தை அனுகியது. உச்ச நீதிமன்றமும் தடை விதித்தது.
செப்டம்பர் 30 அன்று பகல் 12 மணிக்கு தமிழகத்தில் பந்த் கூடாது என தகவல் வெளியாகி விட்டது. இதை தகவலை அறிந்த பின்பு தான் திமுக பந்த்திற்கு பதில் உண்ணாவிரதம் அறிவித்தது. அரசு அலுவலகமும், கடைகளும் திறந்து இருக்கும், பொது மக்களின் மாமூல் வாழ்க்கை பாதிக்காது என அரசு அறித்தது. ஆனால் நடந்தது என்ன அறிவிக்கப்படாத பந்த் தான் நடந்தது.
சேது சமுத்திர திட்டம் அண்ணா கண்ட கனவு திட்டம். கலைஞருக்கு நான் சவால் விடுக்கிறேன். அந்த திட்டம் பற்றி கலைஞர் எந்த பிரதமரிடமாவது பேசியது உண்டா, அல்லது கோரிக்கை மனுவாவது கொடுத்து உண்டா அதை நிரூபிக்க தயாரா. அப்படி அவர் நிரூபித்து விட்டால் நான் பொது வாழ்க்கையிலிருந்தே விலகி கொள்கிறேன்.
திமுக மாநாடு அல்லது பொது கூட்டத்தில் 50 தீர்மனங்கள் நிறைவேற்றுவார்கள். அதில் இதுவும் ஒன்றாக இருக்கும் அவ்வளவுதான்.
மத்திய அரசு கோடைக்குள் கவிழ்ந்து விடும். இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டிய ஆட்சி. அணு சக்தி திட்டம் மூலம் இந்தியாவை அமெரிக்காவிடம் மத்திய அரசு அடமானம் வைத்துவிட்டது. அணு சக்தி ஒப்பந்தத்தில் இடது சாரிகள் மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் வாங்குவது 100 சதவீதம் உறுதி என்றார்.
கரூர் மதிமுக செயலாளர் திடீர் ராஜினாமா!:
கரூர் மாவட்ட மதிமுக செயலாளர் மொஞ்சனூர் ராமசாமி திடீர் என ராஜினாமா செய்தார்.
திமுகவிலிருந்து வைகோ எப்போது வெளியேறி மதிமுகவை தொடங்கினாரோ அப்போதிலிருந்தே அவருடன் இருப்பவர் மொஞ்சனூர் ராமசாமி.
மூத்த அரசில்வாதியான மொஞ்சனூர் ராமசாமிக்கு கரூர் மாவட்ட மதிமுக செயலாளர் பதவி கடந்த 13 வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது. அன்று முதல் இன்றுவரை மொஞ்சனூர் ராமசாமியே மாவட்ட செயலாளராக தொடர்கிறார்.
கரூர் மாவட்ட மதிமுக செயலாளராக உள்ள மொஞ்சனூர் ராமசாமிக்கு வயது அதிகம் காரணமாக அவரால் கட்சிப்பணியை சரிவர ஆற்ற இயலவில்லை. எனவே அவருக்கு பதில் வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என கட்சி முக்கிய நிர்வாகிகள் போர்கொடி உயர்த்தினர்.
ஆனால் மதிமுக பொது செயலாளர் வைகோவிற்கு தொடர்வதற்கு மொஞ்சனூர் ராமசாமி மீது அளவு கடந்த மரியாதையும், பாசமும் கொண்டதால் அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார்.
இதனால் மதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகளான மாவட்ட துணை செயலாளர் பாலகுரு, தலைமை கழக பேச்சாளர் கரூர் முரளி, ஆகியோர் மதிமுகவிலிருந்து வெளியேறினர்.
இருப்பினும் கரூர் மாவட்ட செயலாளராக மொஞ்சனுர் ராமசாமியே தொடர்ந்தார். இந்தநிலையில் கரூர் மாவட்ட செயலாளராக மொஞ்சனுர் ராமசாமி ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக கட்சி நிர்வாகிகளிடம் யாரை மாவட்ட செயலாளாரக நியமிப்பது என கட்சி நிர்வாகிகளிடம் இன்று ஒட்டல் ஹேமலாவில் கருத்து கேட்டறிந்தார்.
அதன் தொடர்ச்சியாக கரூர் பரமத்தி ஒன்றிய செயலாளர் தங்கவேல் அல்லது ஈரோடு யூனியன் சேர்மேன் மணி ஆகிய இருவரில் ஒருவர் மாவட்ட செயலாளர் ஆகும் வாய்ப்பு உள்ளதாக மதிமுவினர் உற்சாகத்துடன் கூறுகின்றனர்.