கடற்படை தாக்குதலில் 3 அகதிகள் பரிதாப சாவு
கொழும்பு:
இலங்கை கடற்பகுதியில் தமிழகத்திற்கு படகில் தப்பி வந்த அகதிகள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர்.
மன்னார் மாவட்டம் நாச்சிகுடா அருகே நேற்று அதிகாலை 4-30 மணியளவில் அகதிகள் குடும்பத்தோடு படகில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அப்பாவி அகதிகளின் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் படகில் இருந்த ஜெபமாலை ஜேசுதாசன் (55), மேரி மிலாக்சனி மேக்சிமஸ்(15) மற்றும் திலாக்சன் மேக்சிமஸ் (11) ஆகியோர் கொல்லப்பட்டனர்.
மேலும் படகில் வந்த புஷ்பமலர் மேக்சிமஸ் (35), அவரின் மகன் மிலாக்சன்(10), மகள் மிதுசினி (8) ஆகியோர் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து 5 மணி நேரத்திற்கு பிறகு நினைவிழந்து மன்னாரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் இறந்தவர்கள் புஷ்பமலரின் தந்தையும், இரு மகள்களும் ஆவர்.
நாச்சிகுடா விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்ததாகும்.
சண்டையில் 34 புலிகள் பலி?:
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த சண்டையில் 34 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இவர்கள் புலிகளா அல்லது அப்பாவி மக்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வன்னிப் பகுதியில் பாதுகாப்பு தடுப்புப் பகுதியைத் தாண்டி விடுதலைப் புலிகள் முன்னேற முயன்றபோது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் 14 விடுதலைப் புலிகள் பலியானதாக பாதுகாப்புத் துறை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் 6 ராணுவத்தினர் காயமடைந்தனர்.
வடக்கில் நடந்த இன்னொரு சண்டையில் 14 விடுதலைப் புலிகள் பலியானார்கள்.
இதேபோல மன்னார் மாவட்டத்தில் கடல் பகுதியில் கடல் புலிகளுக்கும், கடற்படைக்கும் இடையே நடந்த மோதலில் 3 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
இருப்பினும் இவர்கள் புலிகளா அல்லது அப்பாவி மக்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஓமந்தை நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல இடங்களில் புலிகள் மற்றும் ராணுவத்திற்கு இடையே கடும் சண்டை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.