அதிமுக பிரமுகரை காரில் கடத்தி ரூ. 3 லட்சம் பறிப்பு
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக கிளைச் செயலாளரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்ற கும்பல் ரூ. 3 லட்சத்தை பறித்துக் ெகாண்டு தப்பியது.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் பயின் அதிமுக கிளைச் செயலாளராக உள்ளவர் கண்ணன் (57). இவர் கிழங்கு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். எப்போதும் பணப் புழக்கம் உள்ளவர்.
இந் நிலையில் பைக்கில் சென்ற இவரை 8 பேர் கொண்ட கும்பல் காரில் வந்து வழிமறித்து தாக்கி கடத்திச் சென்றது. பின்னர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.3 லட்சம் கேட்டுள்ளனர்.
என்னிடம் பணமில்லை என அவர் கூறவே, நீ எப்போதும் வாங்குவீயே கோயம்பேடு வியாபாரி பிரபாகரன். அவரிடம் வாங்கிக் கொடு என்று கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ந்த கண்ணன் அவர் வெளியூரில் இருக்கிறார் என்று மழுப்பியுள்ளார்.
ஆனால், பிரபாகரனின் செல்போனை தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல் அவருடன் கண்ணனை பேச வைத்துள்ளனர்.
போனில் ஸ்பீக்கரை ஆன் செய்து அவர் என்ன பேசுகிறார் என்பதை கேட்டனர். இதனால் வேறு வழியின்றி கோயம்பேடு வியாபாரி பிரபாகரனிடம் அவசரமாக ரூ.3 லட்சம் பணம் தேவை என்று கண்ணன் கேட்டுள்ளார்.
அதற்கு அவர், நான் இப்போது வெளியூரில் இருக்கிறேன். வீட்டில் போய் என் மனைவியிடம் வாங்கிக் கொள்ளுங்கள், நான் அவரிடம் சொல்லி விடுகிறேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து காரை பிரபாகரன் வீட்டிற்கு செலுத்திய கடத்தல் கும்பல் அங்கு பிரபாகரனின் மனைவியிடம் கண்ணனை விட்டு ரூ. 3 லட்சத்தை வாங்க வைத்தனர்.
பின்னர் மீண்டும் கண்ணனை காரில் ஏற்றிக்கொண்டு கோயம்பேடு பகுதிக்கு வந்து பணத்தை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர்.
இது குறித்து ஆரம்பாக்கம் போலீசில் கண்ணன் புகார் செய்தார். போலீசார் தனிப்படை அமைத்து அந்தக் கும்பலை தேடி வருகின்றனர்.
கண்ணன், பிரபாகரன் குறித்து நன்கு அறிந்த யாரோ தான் இந்தச் செயலை செய்துள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications