தொப்பி வீசிய அதிமுக எம்எல்ஏ போஸ் சஸ்பெண்ட்
சென்னை:
சட்டசபையில் சபாநாயகர் மீது தொப்பியை வீசி அவதூறாக நடந்து கொண்ட அதிமுக எம்எல்ஏ போஸ் அடுத்த சட்டசபைக் கூட்டத் தொடரின் முதல் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அந்தக் கால கட்டத்தில் அவருக்கு சட்டசபை உறுப்பினருக்குரிய சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் கருணாநிதி, அமைச்சர் ஸ்டாலின் மீது கொலைக் குற்றச்சாட்டு கூறிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் கலாட்டாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். அவர்களை அவைக் காவலர்கள் வெளியேற்றியபோது சில எம்எல்ஏக்கள் காவலர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.
ஒரு எம்எல்ஏ அவைக் காவலர் அம்சராஜா என்பவரின் தொப்பியைப் பறித்து சபாநாயகர் மீது வீசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். கும்பலோடு கும்பலாக இந்தச் செயலை செய்ததால் தொப்பி வீசிய ஏம்எல்ஏ யார் என்பது தெளிவாகாமல் இருந்தது.
இந் நிலையில் தொப்பியை வீசியது மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ போஸ் என்று தெரியவந்தது. இவர் தீவிர சசிகலா ஆதரவாளர் ஆவார்.
போஸின் இந்த செயல் குறித்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து போஸ் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இன்று தனது முடிவை தெரிவிப்பதாக சபாநாயகர்அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று சட்டசபையில் தனது தீர்ப்பை சபாநாயகர் அறிவித்தார். அதிமுக உறுப்பினர் போஸ், அடுத்த சட்டசபைத் தொடரின் முதல் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும், அந்த காலகட்டத்தில் எம்.எல்.ஏவுக்குரிய சலுகைகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications