கோவையில் அடுக்கு மாடி வீடுகள் இடிந்து பலர் பலி
உக்கடம்: கோவை உக்கடத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலர் பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கோவை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து உக்கடம் வின்சென்ட் சாலையில் உள்ள, 35 ஆண்டு பழமையான வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் குடியிருந்து வந்தவர்கள் இன்று காலை முதல் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வந்தனர்.
அந்த குடியிருப்பில் மொத்தம் 25 வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் இங்கு குடியிருப்பவர்களை காலி செய்யுமாறு ஏற்கனவே அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் குடியிருப்பாளர்கள் வீடுகளை காலி செய்யாமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் குடியிருப்பவர்களை வெளியேற்றி வந்த நிலையில் இன்று மாலை திடீரென அந்த கட்டடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான பேர் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து தீயணைப்புப் படையினரும், போலீஸாரும் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கத் தொடங்கினர். இரவு எட்டரை மணி வரை 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால் சாவு எண்ணிக்கை அதிகம் இருக்கும் என அஞ்சப்படுகிறது.
படுகாயமடைந்த நிலையில் 12 பேர் மீட்கப்பட்டனர். ஏராளமான பேர் இடிபாடுகளுக்குள் இன்னும் சிக்கியிருப்பதால் மீட்பு நடவடிக்கை முழு வீச்சில் நடந்து வருகிறது.
மாவட்ட ஆட்சித் தலைவர் நீரஜ் மிட்டல், மாநகர காவல்துறை ஆணையர் காந்திராஜன் உள்ளிட்டோர் கண்காணிப்புப் பணிகளை நேரடியாக பார்வையிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications