கேரளாவுக்கு கடத்த இருந்த 17 டன் ரேஷன் அரிசி
திருநெல்வேலி:
நெல்லை அருகே சுத்தமல்லியில் குடோனில் பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தி செல்வது தற்போது அதிகரித்துள்ளது. சோதனை சாவடிகளில் போலீஸ் கண்காணிப்பு, பறக்கும் படையினர் ரோந்தையும் மீறி அவர்கள் கண்களில் மண்ணை தூவிவிட்டு அவ்வப்போது ரயில்களிலும், லாரியிலும் அரிசி கடத்தல் நடப்பது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று நெல்லை அருகே சுத்தமல்லியில் இருந்து லாரியில் கேரளாவிற்கு அரிசி கடத்திச் செல்வதாக உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சுத்தமல்லி விலக்கு பகுதியில் அதிகாரிகள் மறைந்து நின்று கண்காணித்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை மடக்கி போலீசார் சோதனை நடத்தினர். அதில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி அடுக்கப்பட்டு தார்பாய் போடப்பட்டு மூடி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து லாரி டிரைவர் பொள்ளாச்சியை சேர்ந்த ரமேஷ், வத்தலகுண்டை சேர்ந்த கிளீனர் முத்துலிங்கம் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சுத்தமல்லி அருகே பட்டன்கல்லூரியில் உள்ள ஒரு குடோனில் இருந்து ரேஷன் அரிசியை ஏற்றி வந்ததாகவும் கேரளாவிற்கு அரிசியை கொண்டு செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த குடோனுக்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அங்கு மூட்டை, மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.
லாரியில் இருந்த 100 மூட்டை, குடோனில் இருந்த 200 மூட்டை ரேசன் அரிசி மற்றும் லாரியை போலீசார் கைப்பற்றினர். இதன் மொத்த எடை 17 டன் ஆகும்.
ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த பேட்டையை சேர்ந்த துரை, நவாஸ் ஆகிய இருவரும் ஏஜென்டாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இவர்கள் இருவரும் தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து நெல்லை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவர் ரமேஷ், கிளீனர் முத்துலிங்கம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தப்பியோடி துரை, நவாஸ் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.