புத்தகத்திற்குள் துளை போட்டு செல் பதுக்கிய மாணவி
நாகர்கோவில்
பள்ளிக்கூடங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவிலைச் சேர்ந்த பள்ளிக்கூட மாணவி ஒருவர் புத்தகத்திற்குள் செல்போனை பதுக்கி வைத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் செல்போன் தடை உத்தரவைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஆசிரியர்கள் தீவிர சோதனை நடத்த ஆரம்பித்துள்ளனர். இந் நிலையில் படு புத்திசாலித்தனமாக நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு மாணவி, தனது புத்தகத்திற்குள் பெரிய துளை போட்டு அதில் செல்போனை பதுக்கி கொண்டு வந்துள்ளார்.
ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, புத்தகத்தை திறந்து வைத்துக் கொண்டு அதில் புதைந்திருந்த செல்போனில் இருந்து எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருந்தார்.
அந்த ஒரு மாணவி மட்டும் நீண்ட நேரமாக தலையைக் குணிந்தபடி இருந்ததால் சந்தேகமடைந்த ஆசிரியர் அந்த மாணவியிடம் வந்து புத்தகத்தை வாங்கி புரட்டிப் பார்த்தார். அப்போது புத்தகத்திற்குள் செல்போன் ஒன்று அழகாக புதைக்கப்பட்டிருந்தது.
புத்தகத்தின் தாள்களை செல்போன் சைசுகுக்கு வெட்டி, சிறிய அறை போல அமைத்து அதற்குள் அந்த செல்போனை வைத்திருந்தார் அந்த கில்லாடி மாணவி.
அந்த மாணவி தலைமை ஆசிரியர் முன் நிறுத்தப்பட்டார். இனிமேல் இதுபோல செய்ய மாட்டேன் என்று அந்த மாணவி அழுது ஆர்பாட்டம் செய்ததால் வெறும் எச்சரிக்கையோடு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆசிரியர்களுக்கும் 'செல்' தடை:
இந் நிலையில் மாணவர்களுக்கு விதிக்கப்பட்டதைப் போல ஆசிரியர்களும் செல்போன் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து அரசு பள்ளிக் கல்வி இயக்குநர் ஜெகன்னாதன் அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரு சர்க்குலர் அனுப்பியுள்ளார். அதில், ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்திற்கு செல் போன்களைக் கொண்டு வரலாம். ஆனால் வகுப்பறையில் பாடம் நடத்தும்போது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட வேண்டும்.
வகுப்பறையில் இருக்கும்போது செல்போனில் பேசுவதோ, எஸ்.எம்.எஸ்.அனுப்புவதோ கூடாது. வகுப்பறையில் இருக்கும்போது எந்த வகையிலும் செல்போன்களை ஆசிரியர்கள் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.