கண் சிகிச்சை முகாமில் பறி போன பார்வை
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் தவறான சிகிச்சையால் 5 முதியோர்களின் பார்வை பறிபோய்விட்டது.
பெண்ணங்கூர் கிராமத்தில் கடந்த 8ம் தேதி தமிழக அரசின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இந்த முகாமில் பெரும்பாலும் முதியவர்களே வந்து சிகிச்சை பெற்றனர்.
அப்போது கண்ணில் புரை (கேட்டராக்ட்) விழுந்த 9 பேர் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சைக்கு பின் 4 பேருக்கு மட்டும் கண் பார்வை தெரிந்தது. முனியம்மாள்(70), ஊசப்பா(70), முத்தப்பா(65) உள்ளிட்ட 5 பேருக்கு அறுவை சிகிச்சைக்கு பின்னர் முற்றிலும் பார்வை பறிபோய்விட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அரசு டாக்டர்களே அவர்களை மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பெற்றும் கூட பார்வை மீளவில்லை.
இதையடுத்து அவர்களை மீண்டும் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த டாக்டர்கள் அவர்களை அப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டனர். கண் தெரியாத நிலையில் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் தான் வந்து வீடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சந்தோஷ்பாபு கூறுகையில்,
9 பேருக்கு கண்ணில் புரை இருப்பதாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது உண்மை தான். ஆனால் இதில் 4 பேருக்கு மட்டும் சிகிச்சைக்கு பின் பார்வை கிடைத்தது. மீதமுள்ள 5 பேருக்கு முழுமையாக பார்வை கிடைக்கவில்லை. இதற்கு அவர்களின் வயதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
அவர்களை தனியார் மருத்துவமனையிலும் அழைத்து சென்று காட்டினோம். அவர்களுக்கு கண் பார்வை திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். இருந்தாலும் அவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.