ஜெவுக்கு 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் பாதுகாப்பு வேண்டும்-அதிமுக கோரிக்கை
சென்னை:
இரண்டு டிஎஸ்பிக்கள் தலைமையில் ஜெயலலிதாவுக்கு சிறப்புப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதிமுக கோரியுள்ளது.
அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை கழகச் செயலாளர் செங்கோட்டையன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், பொள்ளாச்சி ஜெயராமன், கருப்பசாமி, எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, கலைராஜன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செந்தமிழன் ஆகியோர் இன்று உள்துறைச் செயலாளர் மாலதி, டி.ஜி.பி. ராஜேந்திரன், போலீஸ் கமிஷ்னர் நாஞ்சில் குமரன் ஆகியோரை சந்தித்து மனுக்கள் கொடுத்தனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்ல வீட்டுக்குள் ஒருவர் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக ஏற்கனவே நாங்கள் கொடுத்த மனுவில் தொடர்ச்சியாக இந்த மனுவையும் அளிக்கிறோம்.
அன்றைய தினம் அந்த நபர் பிரதான வாசல் பாதுகாப்புகளையும் மீறி உள்ளே நுழைந்திருக்கிறார். வீட்டுக்குள் நுழைந்தது மட்டுமல்லாமல் முதல் மாடிக்கும் சென்று அங்கிருந்தவர்களை நேருக்கு நேர் சந்தித்திருக்கிறார்.
ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இது எப்படி சாத்தியமானது
இதுபோன்ற பாதுகாப்பு மீறல் நடப்பது இது முதல் முறையல்ல. 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முறையாக பாதுகாப்பு மீறல் நடந்தது. அப்போதே பாதுகாப்பை அதிகரிக்கும்படி கோரிக்கை வைத்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது தொடர்பான விசாரணையும் என்ன ஆனது என்று தெரியவில்லை.
ஜெயலலிதா இரு முறை முதலமைச்சராக இருந்திருக்கிறார். அதிமுக பொதுச் செயலாளராகவும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் இருக்கிறார்.
ஆட்சியில் இருந்தபோது சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் முன்னிலையில் திகழ்ந்தார். நக்ஸல் இயக்கங்களை தடை செய்ததுடன் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கினார்.
எனவே மத்திய அரசு அவருக்கு இசட்பிளஸ் பாதுகாப்பு வழங்கியது. ஆனால் 2006ம் ஆண்டு மே மாதம் அவரது வீட்டிற்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டது. இதன் காரணமாக அவருக்கு தீவிரவாதிகளாலும் சமூக விரோதிகளாலும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இந்த 2 சம்பவங்களும் அவரின் வீட்டுக்கு பாதுகாப்பு போதுமானதாக இல்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
ஜெயலலிதா வீட்டுக்குள் நுழைந்த தண்டபாணி மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அரசை கேட்டுக் கொள்கிறோம். பாதுகாப்பை தரம் உயர்த்தி குறைந்தபட்சம் 2 டி.எஸ்.பிக்களை கொண்டு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இந்த ஊடுருவல்களால் ஜெயலலிதாவின் வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். அதிலும் 2வது முறையாக அத்துமீறி நுழைந்தவரிடம் ஆயுதங்கள் இருந்திருந்தால் விபரீத நிலைமை ஏற்பட்டிருக்கலாம்.
எனவே தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
உள்துறை செயலாளரை சந்திக்க இவர்கள் கோட்டைக்கு வந்தபோது சட்டசபை வளாகத்துக்குள்ளும் நுழையலாம் எனக் கருதிய போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாட்டை செய்திருந்தனர். ஆனால், மாலதியிடம் மனு கொடுத்துவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கூண்டோடு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் சட்டசபைக்குள் நுழைய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications