பெண் ஊழியருக்கு அநீதி - கலெக்டருக்கு அபராதம்
தூத்துக்குடி:
அங்கன்வாடி ஊழியையை மன நோயாளி என்று கூறிய தூத்துக்குடி மாவட்ட திட்ட அதிகாரி மற்றும் இந்த விவகாரத்தில் அக்கறை செலுத்தாமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.பழனியாண்டி ஆகியோருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை அபராதம் விதித்துள்ளது.
தூத்துத்குடி மாவட்டம் சங்கரபேரியில் அங்கன்வாடி மைய ஊழியராக பணியாற்றி வருபவர் தமிழரசி. கடந்த 25 வருடங்களாக அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு வயதான பெற்றோர்கள் இருந்ததால் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந் நிலையில் இவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறி மாவட்ட திட்ட அதிகாரி பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
இதனால் மன உளச்சலுக்கு ஆளான தமிழரசி தனக்கு நீதி வேண்டி மதுரை உயர்நீதிக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் திட்ட அதிகாரியும், குழந்தைகள் திட்ட மேம்பாடு அதிகாரியும் தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழரசி மனநலம் பாதிக்கப்பட்டவர் என கிராம மக்கள் புகார் தெரிவித்ததால் தான் பணி நிக்கம் செய்ததாக தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு, தமிழரசி மன நலத்துடன் உள்ளார் என மதுரை அரசு மருத்துவ மனை சான்றிதழ் கொடுத்துள்ளது. இந்த நிலையில் மனுதாருக்கு மன நலம் சரியில்லை என அதிகாரிகள் கூறுவது முறையல்ல. சரியும் அல்ல. இது துரதிஷ்டமானது.
இந்த விஷயத்தில் அலட்சியத்துடன் செயல்பட்ட மாவட்ட கலெக்டர், மாவட்ட திட்ட அதிகாரி, குழந்தைகள் திட்ட மேம்பாட்டு அதிகாரி ஆகியோருக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கிறேன். இதை மனுதாரரிடம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications