கேரளாவில் லாரி ஸ்டிரைக்: தமிழகம் பாதிப்பு!
நாமக்கல்:
கேரளாவில் லாரி ஸ்டிரைக் நடப்பதால் தமிழக எல்லையில் ஆயிரக்கணக்கான லாரிகள் வரிசை கட்டி நிற்கின்றன. தமிழகத்தில் இருந்து செல்லும் கோடிக்கணக்கான மதிப்புள்ள சரக்குகளும் தேங்கிக் கிடக்கின்றன.
கேரளாவில் லாரி தொழிலாளர் நல நிதிக்கு (இஎஸ்ஐ) ஒவ்வொரு லாரிக்கும் தலா ரூ.200யை லாரி உரிமையாளர்கள் மாதந்தோறும் செலுத்த வேண்டும் என்று முந்தைய காங்கிரஸ் அரசு உத்தரவிட்டது.
ஆனால் கம்யூனிஸ்ட் அரசு ஆட்சிக்கு வந்தபின் இதை மாற்றி ஒரு தொழிலாளிக்கு தலா ரூ.200 வீதம் நல நிதி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும் கடந்த 30 மாதங்களாக நிலுவையில் உள்ள தொகைகை அனைத்து லாரி உரிமையாளர்களும் உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள லாரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தமிழக லாரி உரிமையாளர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இதனால் தமிழகத்திலிருந்து தினமும் கேரளாவுக்கு செல்லும் 5,000க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே சரக்குகளுடன் கிளம்பிவிட்ட லாரிகள் கேரள எல்லைப் பகுதிகளில் பல கி.மீ. தூரத்துக்கு நின்று கொண்டுள்ளன.
இதனால் நாமக்கல் பகுதியில் லட்சக்கணக்கான முட்டைகளும், கொடைக்கானல்-மதுரை, கோவை சுற்று வட்டாரப் பதிகளில் காய்கறிகளும், பருப்பு வகைகளும் தேங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications