உசிலம்பட்டியில் பெண் சிசு கொன்று புதைப்பு!
மதுரை:
மதுரை அருகே உசிலம்பட்டியில், மீண்டும் பெண் சிசுக் கொலை தலை தூக்கியுள்ளது. பிறந்த பெண் குழந்தையை விஷம் வைத்துக் கொன்று புதைத்த கொடூரம் அங்கு அரங்கேறியுள்ளது.
இந்தியாவையே ஒரு காலத்தில் தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ஊர் உசிலம்பட்டி. பெண் சிசுக்களை கொல்ல விதம் விதமான உத்திகளைக் கடைப்பிடித்த உசிலம்பட்டிக்காரர்களின் செயல் நாட்டையே அதிர வைத்தது.
இதன் பின்னர் அரசு தீவிர நடவடிக்கையில் குதித்தது. இதனால் படிப்படியாக உசிலம்பட்டியில் பெண் சிசுக் கொலை குறைந்தது. இந்த நிலையில் உசிலம்பட்டியில், பிறந்த குழந்தையை மண்ணில் புதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உசிலம்பட்டி அருகில் உள்ள கொப்பிலிபட்டியைச் சேர்ந்தவர் சின்னாத்தேவர் மற்றும் சமுத்திராய் தம்பதியரின் மகன் செல்வம் (26). இவர் கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் பகுதியில் முறுக்கு வியாபாரம் செய்து வந்தார். அங்கு சீனிவாசன் என்பவரின் மகள் அமுதாவை திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் திருப்பூரில் பணிபுரிந்து வந்தனர். அமுதா கர்ப்பமானதைத் தொடர்ந்து உசிலம்பட்டிக்கு அழைத்து வந்தார் செல்வம். கொப்பிலிபட்டியில் ஜூலை 4 ம் தேதி அமுதாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை பெற்றதால் அமுதாவை மாமனார் சின்னாத்தேவர், மாமியார் சமுத்திராய் மற்றும் அவர்களின் உறவினர்கள் திட்டினர்.
இந்த நிலையில், ஜூலை 13 ம் தேதி அமுதா வெளியில் சென்றிருந்த போது குழந்தைக்கு விஷம் கொடுத்துள்ளனர். குழந்தை இறந்ததும், இது குறித்து வெளியில் சொன்னால் உன்னையும் கொன்று விடுவோம் என அமுதாவை சின்னாத் தேவரும், சமுத்திராயும் மிரட்டினர்.
பின்னர் அமுதாவை, செல்வம் அவரது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு வந்து விட்டார். அமுதா தனது குழந்தை கொல்லப்பட்டது குறித்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து கோயம்புத்தூர், உத்தப்பநாயக்கனூர் காவல் நிலையங்ளில் புகார் கொடுக்கப்பட்டது. உத்தப்பநாயக்கனூர் போலீஸார் மற்றும் டி.எஸ்.பி., பாலசுப்பிரமணியன் விசாரணை நடத்தினர்.
பின்னர்சி கொப்பிலிப்பட்டிக்கு விரைந்த போலீஸார் செல்வத்தின் பெற்றோரைக் கைது செய்தனர். கொலை செய்து புதைக்கப்பட்ட பெண் சிசுவை உசிலம்பட்டி தாசில்தார் தனசேகரன் முன்னிலையில் தோண்டி எடுத்தனர்.
புதைத்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டதால் குழந்தையின் எலும்புகள் மட்டும் எஞ்சியிருந்தன. அந்த எலும்புகளை ரசாயன பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர்.
தலைமறைவாகி விட்ட செல்வம், அவரது தாய் மாமா காட்டுராஜா ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.