ஜெ. மீதான உரிமை மீறல் பிரச்சினை தவறு-விஜயகாந்த்
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது அமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த உரிமை மீறல் பிரச்சினையில் சபாநாயகர் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா கடந்த 17ம் தேதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தன்னை கொல்ல சதி நடந்ததாகவும் முதல்வர் கருணாநிதியையும், அமைச்சர் ஸ்டாலினையும் சம்பந்தப்படுத்தியும் பேசியுள்ளார். இதுபற்றிய உண்மை நமக்கு தெரியாது.
எனினும், இது பொய் என்றால் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு செல்வதுதான் முறை. அங்கு அவதூறு வழக்கு தொடரலாம். அதை விட்டுவிட்டு சட்டமன்றத்தில் உரிமை பிரச்சினையாக கொண்டு வருவது தவறான முன்மாதிரியாகும்.
சட்டமன்றத்தில் நடைபெறும் நடவடிக்கைகள் அல்லது வெளியில் சட்டமன்றத்தை பற்றிய விமர்சனங்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வருவதை தடை செய்தல், போன்றவையே உரிமை பிரச்சினையில் வரும். அதாவது, சட்டமன்றத்தின் கெளரவம் மக்களிடையே பாதிக்கப்படாமல் காப்பது தான் உரிமைப் பிரச்சனையின் முக்கிய பணி.
ஆனால், ஜெயலலிதா அளித்த பேட்டியில் சட்டமன்றத்தை பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. அப்படி இருக்கையில் சட்டமன்றத்தில் எவ்வாறு இது தொடர்பாக உரிமை பிரச்சினையை எழுப்பாலம் என்பதே நம் கேள்வி.
சட்டமன்றத்தில் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டு உரிமைக்குழுவுக்கு அனுப்பப்பட்டதன் மூலம், சட்டமன்றம் தங்கள் சுயநலத்துக்காக தவறாக பயன்படுத்தப்பட்டது என்றும், சட்டமன்றத்தில் தங்கள் அணி பெரும்பான்மையாக இருப்பதால் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை என்றும் ஜனநாயக மரபுகளை மீறிய செயல் என்றும், நீதிமன்றம் இருக்கும்போது சட்டமன்றத்தை பயன்படுத்துவது நெறிமுறைகளுக்கு முரணானது என்று கருத இடம் ஏற்படும்.
சட்டம் தெரிந்த சபாநாயகர் இந்த நிலைமையை உணர்ந்து தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்து ஜனநாயக வரைமுறைகளை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.












Click it and Unblock the Notifications