பலியான விடுதலைப் புலிகளின் உடல்களை நிர்வாணாக்கி ஊர்வலம்
Click here for more images |
இது பெரும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது. உடைகளுடன் இருந்த புலிகளின் உடல்களை நிர்வாணப்படுத்தி சாலைகளில் ஊர்வலமாகக் கொண்டு சென்றுள்ளனர்.
இதன் மூலம் போரியல் மரபு முறையினை இலங்கை காற்றில் பறக்கவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புலிகள் கண்டனம்:
பலியான விடுதலைப் புலிகளின் உடல்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக எடுத்துச் சென்ற ராணுவத்தின் செயலை விடுதலைப் புலிகள் கண்டித்துள்ளனர்.
இதுகுறித்து புலிகள் அமைப்பின் மனித உரிமைப் பிரிவு செய்தித் தொடர்பாளர் செல்வி விடுத்துள்ள அறிக்கையில்,
அனுராதபுரம் விமான தள தாக்குதலுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் 20 பேரின் உடல்களை கண்டெடுத்துள்ளதாக இலங்கை ராணுவம் கூறியது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக அந்த உடல்களை தருமாறு இலங்கை ராணுவத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு கேட்டுக் கொண்டது.
சர்வதேச போர் விதிகளை மதித்து உடல்களைத் தருவதற்குப் பதிலாக, மிகவும் அநாகரீகமான முறையில், அதிர்ச்சி தரும் வகையில் இலங்கை ராணுவம் நடந்து கொண்டுள்ளது.
முழுச் சீருடையுடன் இறந்து கிடந்த விடுதலைப் புலிகளின் உடல்களை இலங்கை பாதுகாப்புத் துறையின் இணைய தளம் புகைப்படமாக வெளியிட்டுள்ளது. ஆனால், அடுத்த நாளே, தனது மிருகத்தனமான அராஜகத்தை இலங்கை ராணுவம் அரங்கேற்றியுள்ளது.
உடைகள் அகற்றப்பட்ட நிலையில் விடுதலைப் புலிகளின் உடல்களை ராணுவ டிரக்கில் போட்டு ஊர்வலமாக கொண்டு சென்றுள்ளது இலங்கை ராணுவம். இது ஜெனீவா போர் விதி உடன்பாட்டை மீறிய செயலாகும். மனித சமுதாயம் வெறுக்கத்தக்க செயலாகும்.
ஜெனீவா ஒப்பந்தப்படி, போரின்போது இறந்தவர்களின் உடல்களை முழு மரியாதைகளுடன் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
எந்த நிலையில் வீரர்கள் இறந்தார்களோ அதே நிலையில்தான் அவர்களின் உடல்களை ஒப்படைக்க வேண்டும்.
ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக இலங்கை ராணுவம் நடந்து கொண்டுள்ளது. இந்த செயலால் இறந்த வீரர்களின் குடும்பத்தினர் பெரும அதிர்ச்சி அடைந்துள்ளனர். தாங்கள் மிகவும் நேசித்தவர்களின் உடல்களை இப்படி அநாகரீகமாக, அசிங்கமான முறையில் ஊர்வலமாக கொண்டு சென்ற இலங்கை ராணுவத்தின் செயலை எண்ணி பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாறாக, போரின்போது உயிரிழந்த இலங்கை ராணுவ வீரர்களின் உடல்களை உரிய மரியாதைகளுடன் விடுதலைப் புலிகள் திரும்பி ஒப்படைத்திருப்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம் என்று கூறியுள்ளார் செல்வி.
கடும் சண்டையில் 11 புலிகள் பலி:
இந் நிலையில் வவுனியாவில் ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட கடும் சண்டையில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரா விமான தளத்தை புலிகள் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. வடக்கிலும், கிழக்கிலும் பல இடங்ளில் கடும் சண்டை நடந்து வருகிறது.
இன்று வவுனியாவில் விமானப்படையினர் உதவியுடன் ராணுவம் கடும் தாக்குதலைத் தொடுத்தது. இந்த கடும் மோதலில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை முதல் இந்த சண்டை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மோதலில் ஒரு ராணுவ வீரர் பலியானதாகவும், 2 பேர் காயமடைந்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.