மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர்: கருணாநிதி
பசும்பொன் (ராமநாதபுரம்): மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட மத்திய அரசிடம் பேசவுள்ளதாக முதல்வர் கருணாநிதி உறுதியளித்துள்ளார்.
பசும்பொன் கிராமத்தில் அரசு சார்பில் நடந்த தேவர் குருபூஜை விழாவில் முதல்வர் கருணாநிதி பேசினார். அவர் பேசுகையில், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட நடவடிக்கை எடுப்பேன். இதுதொடர்பாக விரைவில் டெல்லி செல்லும்போது மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பேன்.
வி.பி.சிங் அரசு ஆட்சியில் இருந்தபோது, சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்திற்கு அறிஞர் அண்ணா பெயரையும், உள்நாட்டு முனையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரும் சூட்ட வேண்டும் என்ற எனது கோரிக்கை ஏற்கப்பட்டு அதன்படியே பெயர் சூட்டப்பட்டது.
தலைவர்களின் நினைவாக சிலைகள் அமைப்பதும், நினைவிடங்கள் அமைப்பதோடும் நின்று விடாமல் அவர்கள் போதித்த கொள்கைகளையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும். அதைப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் சிலை வைப்பதன், நினைவிடம் அமைப்பதின் உண்மையான நோக்கம் நிறைவேறும்.
நாட்டின் சுதந்திரத்திற்காக தேவர் திருமகனார் அரும்பாடு பாடுபட்டார். பெரும் சேவையாற்றியுள்ளார். தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஏழை மக்கள் நலம் பெற, வளம் பெற பாடுபட்டவர்.
அரசு விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன் கோரிக்கை விடுத்தார். அதை கணிவுடன் பரிசீலிப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும், அரசு விடுதிகளில் தங்கிப் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு 300 ரூபாயிலிருந்து 400 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 400 ரூபாயிலிருந்து 500 ரூபாயாகவும் உதவித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பள்ளி மாணவர்களுக்கு மாதாந்திர உபரி உதவித் தொகை 15 ரூபாயிலிருந்து 25 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 25 ரூபாயிலிருந்து 35 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார் கருணாநிதி.