ஆபாச 'ஸ்கர்ட்' - மலேசியாவில் சர்ச்சை!
கோலாலம்பூர்: குட்டையான ஸ்கர்ட்டுகளுடன் மலேசிய விமான நிறுவனப் பணிப் பெண்கள் பணியாற்றுவதற்கு மலேசியாவைச் சேர்ந்த பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கோலாலம்பூரில் இஸ்லாம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதில் ஐக்கிய மலாய் தேசிய கழகம் சார்பில் கலந்து கொண்ட பெண் பிரதிநிதிகள் குழு, மலேசியாவின் குறைந்த கட்ட விமான நிறுவனமான ஏர் ஏசியா நிறுவனத்தில் பணியாற்றும் விமானப் பணிப் பெண்கள் குட்டை ஸ்கர்ட்டுகளுடன் பணியாற்றுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துப் பேசினர்.
இந்தப் பணிப் பெண்கள் அணிந்துள்ள ஸ்கர்ட், முழங்காலுக்கு மேல்தான் உள்ளது. இதனால் பார்ப்பதற்கு படு கவர்ச்சியாக உள்ளது. இதனால் பயணிகளின் கவனம், குறிப்பாக ஆண்களின் கவனம் திசை திரும்பும்.
எனவே முழங்காலுக்கு கீழே வரும் வகையில் ஸ்கர்ட்டுகளை மாற்றி அமைக்க வேண்டும். கவர்ச்சிகரமான உடைகளைப் பெண் பணியாளர்கள் அணியாமல், இஸ்லாமிய முறைப்படியிலான உடைகளை அணிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரினர்.
வட கிழக்கு மாகாணமான கெலன்டானிலிருந்து வந்திருந்த பெண் பிரதிநிதி சலேஹா ஹூசைன் கூறுகையில், பணிப் பெண்களின் சீருடை மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது. தங்களது தொடைகளை அப்பட்டமாக வெளிக்காட்டும் வகையில் அவர்கள் உடை அணிவதை நாங்கள் விரும்பவில்லை.
மலேசியா ஒரு முஸ்லீம் நாடு. ஆனால் ஏர் ஏசியா நிறுவனத்தின் பணிப் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள சீருடை மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பது அதிர்ச்சி தருகிறது என்றார். பெண்களின் இந்தக் கோரிக்கைக்கு ஆண்களும் ஆதரவு தெரிவித்தனர்.
ஆசியாவின் வேகமாக வளரும் குறைந்த பட்ஜெட் விமான நிறுவனம் ஏர் ஏசியா. இந்த நிறுவனத்தில் பல்வேறு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் மலாய் முஸ்லீம்களும் அடக்கம்.
பணிப்பெண்களின் சீருடை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது தொடர்பாக ஏர் ஏசியாவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், குறைந்த உயரத்திலான உடை அணிவதன் மூலம் நாங்கள் மலேசிய முஸ்லீம்களைக் குறைத்து மதிப்பிடுவதாக கூற முடியாது.
எங்களது நாட்டை விட்டுக் கொடுக்கும் வகையிலான உடைகளை நாங்கள் அணியவில்லை. இந்த சர்ச்சை தேவையில்லாதது என்று கூறினார்.