விஷ்ணுபிரசாத்தை கைது செய்ய இடைக்காலத் தடை
சென்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் தலைவர் விஷ்ணுபிரசாத்தைக் கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் 2 வார கால இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் புகுந்த ஆயுதம் தாங்கிய கும்பல், இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமாரை தாக்கிக் காயப்படுத்தியது.
அரிவாளால் வெட்டப்பட்ட ஜெயக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், செய்யாறு தொகுதி எம்.எல்.ஏவும், மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மகனுமான விஷ்ணுபிரசாத் உள்ளிட்ட 19 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 2 பேரைக் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து விஷ்ணுபிரசாத் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை இன்று நீதிபதி சுதந்திரம் விசாரித்தார். அப்போது 2 வாரங்களுக்கு விஷ்ணுபிரசாத்தை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தார். மனு மீதான விசாரணையையும் அவர் 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.