போலி சாதி சான்றிதழ்: மோசடி செய்து அரசு வேலையில் சேர முயன்ற பெண்
தென்காசி: போலியாக சாதி சான்றிதழ், போலி அரசு சீல் தயாரித்து ரயில்வே துறையில் வேலையில் சேர முயற்சி செய்த பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரையை அடுத்துள்ள சொக்கானூரணி, வள்ளி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரனின் மகள் சபீதா. இவர் ரயில்வேயில் வேலைக்கு சேர விண்ணப்பம் செய்திருந்தார்.
இந்த பணி தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டதாகும். சபீதா தனது விண்ணப்பத்துடன் தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட ஜாதி சான்றிதழ் ஒன்றை இணைத்திருந்தார். தென்னக ரயில்வே அதிகாரிகள் இந்த சான்றிதழை தென்காசி உதவி கலெக்டர் அலுவலக ஆவணங்களுடன் சரி பார்த்தனர்.
அப்போது இந்த ஜாதி சான்றிதழ் போலியாக தயார் செய்யப்பட்டது எனத் தெரிய வந்தது. அதாவது சான்றிதழில் மலைக்குறவன், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த சான்றதழில் சபீதா செங்கோட்டை என்ற முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. இதன் வரிசை எண் 21627 என்றும் சான்றை வழங்கிய அதிகாரி ரமண சரசுவதி என்றும் கையெப்பம் இடப்பட்டு இருந்தது. மேலும் அரசு சீல் வைத்து அதில் வருவாய் கோட்டாட்சி தலைவர், தென்காசி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனை சரி பார்க்கும் போது 21627 என்ற வரிசை எண்ணே உதவி கலெக்டர் அலுவலக ஆவணத்தில் இல்லை. உதவி கலெக்டர் ரமண சரசுவதி கடந்த 28-10-2005 முதல் 14-9-2007 வரை விடுப்பில் இருந்தார். ஆனால் சான்று 21-11-2006ம் தேதி உதவி கலெக்டர் ரமண சரசுவதியால் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் அரசு சீல் தற்போது தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைவர் மற்றும் உட்கோட்ட நடுவர் என்று தான் உள்ளது.
எனவே அனைத்து ஆவணங்களும் போலியாக தயார் செய்யப்பட்டு ரயில்வே அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு இருந்தது. இத்தகைய போலி சான்று தயார் செய்து மத்திய, மாநில அரசுகளை ஏமாற்றிய இளம்பெண் சபீதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் தென்காசி உதவி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இந்த புகாரை ஏற்றுக் கொண்ட உதவி கலெக்டர் ராஜாராம் தென்காசி போலீசாருக்கு சபீதா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து தென்காசி போலீசார் சபீதா மீது போலி சான்றிதழ் தயாரித்து மோசடி செய்ததற்காக 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சபீதாவையும், இதற்கு உடந்தையாக இருந்தவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.