சபரிமலையில் 18 படிகளை தொட முயன்ற பெண் கைது
சபரிமலை: சபரி மலை ஐயப்பன் சன்னிதானத்தில் 18 படிகளை தொட முயன்ற புதுச்சேரியை சேர்ந்த 30 வயது பெண் கைது செய்யப்பட்டார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று நடை திறக்கப்பட்டு மண்டல பூஜை தொடங்கியது.
சபரி மலையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந் நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த 30 வயதான செல்வி என்பவர் எப்படியோ சபரிமலைக்கு வந்துவிட்டார்.
ஐயப்பன் சன்னிதானத்தில் உள்ள புனித 18 படிகளை தொட அவர் முயற்சி செய்தார். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவரைக் கைது செய்தனர்.
இரு முட்டி கட்டி வந்த ரஷ்ய மாணவர்கள்:
இதற்கிடையே ஐயப்பன் கோவிலுக்கு ரஷ்ய மாணவர்கள் 5 பேர் இருமுடி கட்டி மாலை அணிந்து வந்து அங்கிருந்த பக்தர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
இடுக்கி மாவட்டம், கட்டப்பனை என்ற இடத்தில் உள்ள இந்து விஸ்வ வித்யாலயா பயிலகத்தில் களரிச் சண்டை, வாஸ்து, சமஸ்கிருதம் மற்றும் ஜோதிடம் கற்றுத் தரப்படுகிறது.
இங்கு ரஷ்யாவைச் சேர்ந்த 6 பேர் பயின்று வருகின்றனர். இதில் ஒருவர் மாணவி. இங்கு சேர்ந்த பின் 6 பேரும் தங்கள் பெயர்களை மணிகண்டன், கிருபாகரன், ஸ்ரீகண்டன், சுதர்சனன், முருகன் மாளிகைபுரம் வியாகவனேஸ்வரி என்று இந்துப் பெயர்களாக மாற்றிக் கொண்டனர்.
மேலும் மாணவியைத் தவிர மற்ற 5 மாணவர்களும் 41 நாட்கள் கடும் விரதம் இருந்து பின்னர் இருமுடி கட்டி நேற்று பம்பை வந்து சேர்ந்தனர். பம்பையில் குளித்து விட்டு மற்ற பக்தர்களுக்கு அவர்கள் இனிப்பு வழங்கினர்.
அந்த ரஷ்ய மாணவர்கள் கூறுகையில், நாங்கள் பயிற்சி முடித்து ரஷ்யா சென்ற பிறகும் இதே இந்து பெயர்களை பயன்படுத்துவோம் என்றனர்.
கோவிலில் அரவணை தட்டுப்பாடு:
இதற்கிடையே கோவிலின் பிரசாதமான அரவணைக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. முதலில் பிரசாதம் சப்ளை செய்ய 5 கவுண்டர்கள் திறக்கப்பட்டன.
ஆனால் அரவணைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டவுடன் 2 கவுண்டர்களாக குறைக்கப்பட்டன. அந்த கவுண்டர்களிலும் அரவணை தீர்ந்து போனதால் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இன்னும் 48 மணி நேரத்தில் அரவணை தட்டுப்பாடு சரி செய்யப்படும் என தேவசம் போர்டு தலைவர் குப்தன் நாயர் கூறி உள்ளார்.
தற்போது அரவணை தயாரிக்க டெண்டர் எடுத்து இருக்கும் நிறுவனம் முதன்முறையாக இந்த டெண்டரை பெற்றுள்ளதாம். இதனால் தான் இந்த தட்டுப்பாடாம்.
அனுபவம் இல்லாத அந்த நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கக்கூடாது என அப்போதே எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.