விமானக் கடத்தல் மிரட்டல்: டெல்லியில் பரபரப்பு

உ.பி. மாநிலம் கான்பூர் நகர போலீஸாருக்கு நேற்று காலை ஒரு தொலைபேசி தகவல் வந்தது. அதில் பேசிய நபர், டெல்லி - கான்பூர் விமானம் கடத்தப்படவுள்ளது. முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள். விமானத்தில் வெடிகுண்டும் வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து கான்பூர் போலீஸார், டெல்லி விமான நிலைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கடத்தல் குறித்த விவரத்தைத் தெரிவித்தனர். இதையடுத்து விமான நிலையத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. பயணிகளிடமும் சோதனை நடத்தப்பட்டது. கான்பூர் விமானத்திலும் முழுமையாக சோதனை நடந்தது. ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை.
கிட்டத்தட்ட 3 மணி நேரம் நடந்த இந்த தீவிர சோதனை மற்றும் விசாரணையில், கடத்தல் மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிய வந்தது.
இதையடுத்து 42 பயணிகளுடன் கான்பூர் விமானம் பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியிலிருந்து கிளம்பிச் சென்றது.
நேற்றுதான் மத்திய சிவில் விமான பாதுகாப்புக் கழகம் அனைத்து விமான நிலையங்களுக்கும் ஒரு எச்சரிக்கை அறிவிக்கையை அனுப்பியிருந்தது.
அதில், இன்னும் 15 நாட்களில் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஹர்கத் உல் ஜிகாத் இ இஸ்லாமி ஆகிய தீவிரவாத அமைப்புகள் விமான நிலையங்களில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுப் பிரிவு எச்சரித்திருப்பதால் விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பன்மடங்கு அதிகரிக்கப்பட வேண்டும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் டெல்லி - கான்பூர் விமானத்திற்கு மிரட்டல் வந்ததால், டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications