திமுகவினருக்கு மட்டும்தான் டிவியா? - விஜயகாந்த் கேள்வி
சென்னை: தமிழகத்தில் திமுகவினருக்கு மட்டுமே இலவச கலர் டிவி வழங்கப்பட்டு வருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இலவச கலர் டிவி வழங்கும் போது ஏற்பட்ட தகராறில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும்
தொண்டர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களை தாக்கியவர்களை கைது செய்யாமல் காவல்துறையினர் தேமுதிகவினரை கைது செய்துள்ளனர்.
முதலில் ரேசன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் இலவச கலர் டிவி என்றார்கள். பின்னர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தருவதாக சொன்னார்கள். ஆனால் நேற்று சென்னையில் நடந்த விழாவில் திமுகவினருக்கு மட்டுமே இலவச கலர் டிவி வழங்கப்பட்டுள்ளது.
இதை தட்டிக் கேட்ட எங்கள் கட்சி தொண்டர்கள் மீது காட்டு மிராண்டி தனமாக தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதுவரை அரசு யார் யாருக்கு இலவச கலர் டிவி வழங்கியுள்ளது என பட்டியலை வெளியிட வேண்டும்.
தமிழகம் முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்துக்கு படப்பிடிப்புக்கு சென்றிருந்தேன். கடையம், பண்மொழி, தோரணமலை பகுதி மக்கள் அந்த பகுதியில் மின்தடை அதிகமாக இருப்பதாக என்னிடம் புகார் கூறினார்கள். மின்தடையை போக்க அரசு இதுவரை ஆக்கப்
பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆர்டிஓ அலுவகங்களில் அபரிதமான அளவுக்கு அரசு சேவை வரியை திணித்துள்ளது மிகவும் அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது. ஏற்கனவே ஓட்டுனர் உரிமம் பெற ரூ.30 கட்டணம் என்றால், தற்போது ரூ.60 ஆகியுள்ளது. இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமங்களுக்கு
விண்ணப்பிப்பவர்களுக்கு ரூ.250லிருந்து ரூ.350 ஆக கட்டணம் செலுத்த வேண்டும்.
3 சக்கர வாகனங்களுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு பதிவு கட்டணம் ரூ.200 லிருந்து ரூ.400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்காலிக பதிவு கட்டணம் ரூ.40லிருந்து ரூ.140 ஆக உயர்த்தப்பட்டுள்ளு. தடையில்லா சான்றிதழ் பெற ரூ.2 க்கான கோர்ட் பீஸ் ஸ்டாம்ப் ரூ.50 ஆகியுள்ளது.
சுண்டைக்காய கால் பணம் என்றால், சுமை கூலி முக்கால் பணம் என்ற கதையாக உள்ளது.
மாநில அரசு சேவைக் கட்டணம் விதிக்கலாம் என்று மத்திய அரசு அனுமதித்தவுடன், தான் செய்து வரக்கூடிய நியாயமான கடமைகளுக்கு கூட கட்டணங்களை பல மடங்கு ஏற்ற அரசு முற்பட்டிருப்பது அநியாயமான நடவடிக்கை மட்டுமல்ல, சட்ட விரோதமானதாகும்.
இப்படி செய்வதை விட நேரடியாக கட்டணங்களை உயர்த்திவிட்டு, இது சேவை வரியல்ல, தேவை வரி என்று சொல்லியிருக்கலாம்.
எந்த முகாந்திரமும் இல்லாமல் வருமானத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு ஏழை, நடுத்தர மக்கள் மீது திடீரென்று சுமத்தியுள்ள இந்த கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று விஜயகாந்த்
கூறியுள்ளார்.