நாளை திமுக இளைஞரணி மாநாடு-லட்சக்கணக்கில் குவியும் தொண்டர்கள்

Subscribe to Oneindia Tamil


திருநெல்வேலி: நெல்லையில் நாளை தொடங்கும் திமுக இளைஞரணி முதல் மாநில மாநாட்டில் மத்திய, மாநில அமைச்சர்கள் 39 பேர் பங்கேற்கிறார்கள்.

திமுக இளைஞரணி நெல்லையில் முதன்முறையாக இந்த மாநில மாநாட்டை நடத்துகிறது. பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரி மைதானத்தில் 2 நாள் நடக்கும் இந்த மாநாடு நாளை (15ம் தேதி) துவங்குகிறது.

மாநாட்டில் 8 லட்சம் தொண்டர்கள் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில் லாட்ஜ்கள், திருமண மண்டபங்கள் அனைத்தும் திமுகவினரால் பதிவு செய்யப்பட்டுவிட்டன.

நெல்லையில் திமுக இளைஞரணி மாநாடு நாளை துவங்கி 2 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி நெல்லை நகரமே திமுகவினனர் மயமாகியுள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மாநில இளைஞரணி அமைப்பாளரும், உள்ளாட்சி துறை அமைச்சருமான மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினமே வந்து நெல்லையில் முகாமிட்டுவிட்டார்.

மாநாட்டுப் பணிகளை முன் நின்று கவனித்து வருகிறார்.

முதல்வர் கருணாநிதி நாளை காலை அனந்தபுரி எக்ஸ்பிரஸில் வருகிறார்.

இதில் திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் டி.ஆர். பாலு, ராசா, ரகுபதி, சுப்புலெட்சுமி ஜெகதீசன், ராதிகா செல்வி, வெங்கடபதி, பழனி மாணிக்கம், மாநில அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.

விஜபிகளின் வருகையால் நெல்லையில் அனைத்து ஹோட்டல்களும் நிறைந்து விட்டன.

முதல்வர் கருணாநிதி, அமைச்சர் ஸ்டாலின் அவர்களது குடும்பத்தினர் தாழையூத்து விருந்தினர் மாளிகையில் தங்குகின்றனர்.

அமைச்சர்களுக்கு வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகை, ஹோட்டல் ஆர்யாஸ் மற்றும் முக்கிய ஹோட்டல்களில் அறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எம்.பி, எம்.எல்.ஏக்கள் மற்றும் விஜபிக்களுக்காக 500க்கும் மேற்பட்ட அறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை தவிர குற்றாலம் விருந்தினர் மாளிகை, லாட்ஜுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி, கோவில்பட்டி, குற்றாலம், தென்காசி, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய இடங்களிலும் விஜபிகளுக்கு இடங்கள் புக் செய்யப்பட்டுள்ளன.

தொண்டர்கள், போலீசார் தங்குவதற்கு திருமண மண்டபங்கள், பண்ணைத் தோட்டங்கள் புக் செய்யப்பட்டுள்ளன.

இதனால் லாட்ஜுகள், திருமண மண்டபங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.

9 வகை தோரணங்கள்:

மாநாட்டிற்கு வரும் முதல்வரை வரவேற்று 9 வகையான தோரண வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாளை ஹைகிரவுண்ட் டிஐஜி பங்காளவில் இருந்து மாநாட்டு மேடைக்கு முதல்வர் திரும்பும் சாலை முதல் மாநாட்டு மேடை சாய்தளம் வரை தோரண வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையின் சிறப்பை விளக்கும் வகையில் முதலில் நெல் அலங்காரத்தில் தோரண வாயிலும், இளநீர், நூங்கு, கரும்பு, குலைவாழைகள், பழ வகைகள், வெற்றிலை, காய்கறி தோரண வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நகரில் 20 கி.மீ தூரத்திற்கு திமுக கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.

தலைவர்கள் அமரும் மேடையில் பெங்களுரில் இருந்து வரவழைக்கப்பட்ட பூக்கள் அடங்கிய தொட்டிகள் ஏராளமாக வைக்கப்பட்டுள்ளன.

பல பனை மரங்கள் வேறோடு பிடுங்கப்பட்டு மாநாட்டு அரங்கில் நடப்பட்டுள்ளன.

முதல் நாள் நிகழ்ச்சிகள்:

மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக நாளை காலை 10 மணிக்கு முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் மகள் தமிழச்சி தங்கபாண்டியன் கொடியேற்றி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர் கருணாநிதி ஜீப்பில் சென்று மாநாட்டு பந்தலை சுற்றி பார்க்கிறார்.

பிற்பகல் 2 மணிக்கு 5 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் பிரமண்ட பேரணி பாளை வ.உ.சி. மைதானத்தில் இருந்து துவங்குகிறது. பேரணிக்கு ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். திறந்த ஜீப்பில் நின்று அவர் பேரணியை வழிநடத்தி செல்கிறார். மத்திய அமைச்சர் ராஜா பேரணியை துவங்கி வைக்கிறார்.

பேரணிக்கு முன்பாக 56 குதிரைகளில் இளைஞர்கள் திமுக கொடியுடன் அணிவகுத்து செல்கின்றனர். இதை தொடர்ந்து பயிற்சி பெற்ற இளைஞர்கள் 3,000பேர் வெள்ளை சீருடை அணிந்து செல்கின்றனர். அவர்களுக்கு பின்னால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட திமுக இளைஞரணியினர் சீருடை அணிந்து அணிவகுத்து செல்கின்றனர்.

ஹைகிரவுண்ட் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள திருவாரூர் தேர் வடிவிலான தனி மேடையில் இருந்து பேரணியை முதல்வர் கருணாநிதி, பொது செயலாளர் அன்பழகன் ஆகியோர் பார்வையிடுகின்றனர்.

பின்னர் இரவு 8 மணிக்கு மாநாட்டு வாளகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரகங்கத்தில் காவிய கலைஞர்-84 என்ற தலைப்பில் நடக்கும் ஒலி, ஒளி காட்சியை முதல்வர் பார்க்கிறார். இந்நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக பொது செயலாளர் வீரமணி தலைமை வகிக்கிறார்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்:

மாநாட்டின் 2ம் நாள் நிகழ்ச்சி 16ம் தேதி காலை 9.30 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்குகிறது. மாணவரணி மாநில செயலாளர் இள.புகழேந்தி துவங்கி வைக்கிறார். மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் முத்துராமலிங்கம் வரவேற்கிறார்.

பகல் 12 மணிக்கு அமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார். பிற்பகல் 3 மணிக்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இரவு 7 மணிக்கு அமைச்சர் அன்பழகன் பேசுகிறார். அதனை தொடர்ந்து 8 மணிக்கு கருணாநிதி மாநாடு நிறைவுரையாற்றுகிறார்.

ஆட்டோக்களுக்கு கிராக்கி:

கடந்த ஒரு வாரமாக இந்த மாநாட்டு பந்தலை பார்க்க வரும் பார்வையாளர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இதனால் ஆட்டோக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பொது மக்கள் குடும்பத்துடன் வந்து கூட்டம் கூட்டமாக பார்த்து செல்கின்றனர். நெல்லை, பாளை, டவுண், பெருமாள்புரம், கேடிசி நகர், பாளை மகாராஜாநகர், அன்புநகர், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதி மக்கள் ஆட்டோவில் வந்து செல்கின்றனர்.

இதனால் இப்பகுதி ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. அனைத்து ஆட்டோ டிரைவர்களும் தொடர்ந்து பிசியாகவே உள்ளனர்.

தனி மருத்துவ குழு:

மாநாட்டிற்கு வரும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. 10 லட்சம் பேருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, 200 கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாநாட்டு பந்தலில் மருத்துவக் குழுக்களும் ஆம்புலன்ஸ்களும் 24 மணி நேரமும் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+