பிரபாகரன் கொல்லப்பட்டால்தான் தீர்வு கிடைக்கும்: டக்ளஸ் தேவானந்தா
கொழும்பு: பிரபாகரன் உயிருடன் இருக்கும் வரை இனப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. அவர் கொல்லப்பட்டால்தான் அமைதி உருவாகும், பிரச்சினை தீரும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், இலங்கை சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
கொழும்பில் பல்வேறு நாட்டு செய்தியாளர்களிடையே தேவானந்தா பேசினார். அப்போது அவர் கூறுகையில், இலங்கையில் கடந்த 25 ஆண்டு காலமாக நீடித்து வரும் இனப் பிரச்சினைக்கு, தீர்வு ஏற்பட வேண்டுமானால், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட வேண்டும். அவர் உயிரோடு இருக்கும் வரை அரசியல் ரீதியாக தீர்வு ஏற்பட வாய்ப்பு இல்லை.
பிரபாகரன் ஒரு துண்டு நிலம் வேண்டுமென்றுதான் விரும்புகிறாரே தவிர, அமைதியை விரும்பவில்லை. வன்னி பகுதியில் உள்ள மக்களில் 90 சதவீதம் பேர் அவரை வெறுக்கிறார்கள். இனப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண அதிபர் ராஜபக்சே ஒப்புக்கொண்டுள்ளார்.
எனக்கு முதலமைச்சர் அதிகாரம் கொடுத்தால், வடக்கு, கிழக்கு பகுதியில் ஒரு ஆண்டுக்குள் இயல்பு நிலையை கொண்டு வருவேன். வடக்கு பகுதியிலும், கிழக்கு பகுதியிலும் நேரடி தேர்தல் நடைபெற வேண்டும். அப்படி தேர்தல் நடந்தால், பிரபாகரன் ஒதுக்கப்படுவது உறுதி. அவரை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
நான் மரணத்துக்கு பயப்படவில்லை. என்னை கொலை செய்ய 12 முறை முயற்சிகள் நடந்துள்ளன. அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்பட்டதில்லை. கடந்த மாதம் கூட ஒரு பெண் மனித வெடிகுண்டாக வந்து என்னைக் கொல்லப் பார்த்தார்.
என் மீது நடந்த அனைத்து கொலை முயற்சிகளுக்கும் பிரபாகரன்தான் காரணம். அவர் மனிதாபிமானமற்றவர். ஹிட்லர் போன்றவர். கொடுங்கோலர்களுக்குச் சமமானவர்.
இலங்கையில் இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும் என்றால், பிரபாகரன் அங்கு இருக்கக்கூடாது. அவர் இருக்கும் வரை தீர்வுக்கு வழியே இல்லை.
இதை நான் ஜெயவர்த்தனே முதல் சந்திரிகா குமாரதுங்கா வரை அனைத்து அதிபர்களிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன். புலிகளுடன் மீண்டும் அதிபர் மகிந்தா ராஜபக்சே பேச்சுவார்த்தைக்குப் போனால் அது மிகப் பெரிய முட்டாள்தனமாக இருக்கும் என்றார் தேவானந்தா.
இந்த செய்தியாளர்களின் கூட்டத்தின்போது, மனித வெடிகுண்டாக வந்த பெண் குண்டை வெடிக்கச் செய்த சம்பவத்தின் வீடியோ காட்சியை தேவானந்தா செய்தியாளர்களுக்குப் போட்டுக் காண்பித்தார்.