திவ்யாவிடமிருந்து விலக சென்னை சாமியார் முடிவு
சென்னை: 3வதாக ஹோமியோபதி டாக்டர் திவ்யாவைத் திருமணம் செய்தது தவறு. அதை உணர்ந்து விட்டேன். அவரிடமிருந்து விலகி, புது வாழ்க்கை தொடங்க தயாராக உள்ளேன் என்று பெரும் சர்ச்சையில் சிக்கி கைது செய்யப்பட்ட சென்னை சாமியார் பழனிச்சாமி போலீஸில் தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரி ராம் நகர் பகுதியில் துர்கா ஆசிரமம் என்ற பெயரில், மதுரை வீரன் கோவிலை நடத்தி வந்தவர் பழனிச்சாமி. சமீபத்தில் இவர் மீது சரமாரியான புகார்கள் குவிந்தன.
தனது மகளான ஹோமியோபதி டாக்டர் திவ்யாவை மயக்கி கடத்திச் சென்று கல்யாணம் செய்து விட்டதாக பழனிச்சாமி மீது, திவ்யாவின் தந்தை போஜராஜ் ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
மேலும், பழனிச்சாமியின் முதல் மனைவி சந்திராவும் தனது கணவர் மீது போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து பழனிச்சாமி, திவ்யாவுடன் தலைமறைவானார். டெல்லிக்குச் சென்று விட்ட இருவரும் சில நாட்களுக்கு முன்பு திரும்பி வந்தனர்.
திவ்யா வேளச்சேரி ஆசிரமத்திற்குத் திரும்பி தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்தார். பழனிச்சாமியை, அச்சரப்பாக்கம் அருகே போலீஸார் கைது செய்தனர்.
சமீபத்தில் பழனிச்சாமியை 5 நாள் காவலில் போலீஸார் எடுத்து விசாரித்தனர். அவரை மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து பரங்கிமலை துணை காவல் ஆணையர் வரதராஜுலு விசாரித்தார்.
இந்த விசாரணையின்போது தான் எந்தத் தவறும் செய்யவில்லை. நரபலி எதுவும் கொடுக்கவில்லை. மதுரை வீரன் அருள் வந்து சாமியாடி குறி மட்டுமே சொல்வேன். மதுரை வீரன் சாமிக்கு சாராயம் கொடுப்பது சாதாரண விஷயம்தான். ஆனால் இப்போது சாராயத்திற்குத் தடை இருப்பதால் பீர் மற்றும் பிற மது வகைகளை கொடுப்பேன்.
நான் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யவில்லை. என் மீது எந்த பக்தரும் இதுவரை புகார் கொடுக்காததிலிருந்தே இது தெரிய வரும். நான் 3வது கல்யாணம் செய்ததுதான் தவறு. அதை நான் உணர்ந்து விட்டேன்.
திவ்யாவிடமிருந்து பிரிந்து விட நான் தயாராக இருக்கிறேன். அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும். புது வாழ்க்கை தொடங்க ஆர்வமாக உள்ளேன். எனது குழந்தைகள் நலன் எனக்கு முக்கியம் என்று கூறியுள்ளார்.
அதேபோல, தனது கணவர் மீது புகார் கொடுத்தது தவறு. எனது குழந்ைதகள் நலனுக்காக அவரை விடுதலை செய்ய வேண்டும். அவர் நல்லவர்தான். ஆனால் 3வதாக கல்யாணம் செய்ததுதான் அவர் செய்த ஒரே தவறு. அதைக் கூட நான் மன்னிக்கத் தயாராக உள்ளேன். எனது கணவரை விடுவித்து விடுங்கள் என்று சந்திராவும், போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து திவ்யாவை நேரில் அழைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது தனது முடிவை ஒரு வாரத்தில் சொல்வதாக கூறி விட்டு மீண்டும் ஆசிரமத்திற்கே சென்று விட்டார் திவ்யா.
இதற்கிடையே, சாமியாரின் முடிவு தங்களுக்கு திருப்தி தருவதாகவும், தங்களது மகள் திரும்பி வந்தால் போதும் என்றும் திவ்யாவின் தந்தை போஜராஜ் கூறியுள்ளார்.
5 நாள் காவலில் எடுக்கப்பட்ட சாமியாரை, 3 நாட்களிலேயே விசாரணையை முடித்துக் கொண்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீஸார் மீண்டும் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் விரைவில் சமரசம் ஏற்பட்டு சாமியார் வெளியே வந்து விடலாம் எனத் தெரிகிறது.