பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்-வைகோ
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக சிங்கள அரசு பொய்யை பரப்பி வருகிறது. இதில் துளியும் உண்மை இல்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
தமிழக அரசு முல்லை பெரியாறு, காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட மறந்துவிட்டது. சென்னையை தவிர தமிழகத்தின் பிறபகுதிகளில் மின்சார தட்டுப்பாடு எப்போதும் இல்லாத அளவு உள்ளது.
உரத்தட்டுப்பாடு நீடிக்கிறது. நெல்லுக்கு குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.1,000 வழங்க தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
திமுக ஆட்சியில் ஆடம்பர விழாக்கள் நடத்துவதிலும், இலவச திட்டங்களை செயல்படுத்துவதிலும் தான் கவனம் செலுத்துகிறார்கள். மக்கள் பிரச்சனைகளில் சிறிதும் அக்கறை காட்டவில்லை. இவற்றை கண்டித்து வருகிற 11ம் தேதி கோவில்பட்டியில் எனது தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் மணல் கொள்ளை அதிகரித்துவிட்டது. குற்றங்கள் அதிகரித்துள்ளதால் போலீசார் மீது நம்பிக்கை குறைந்துவிட்டது. நெல்லை திமுக இளைஞர் அணி மாநாட்டின் மூலம் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காணப்படவில்லை. எங்கள் கட்சியை அழிக்க நடந்த முயற்சி நிறைவேறவில்லை. எங்கள் கட்சி கட்டுக்கோப்புடன் இருக்கிறது.
கட்சியை மேலும் வலுப்படுத்த அந்தந்த பகுதி மக்களின் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி போராட்டம் நடத்தி, பல்வேறு உதவிகளும் செய்வோம்.
மதிமுக இந்த ஆண்டில் ஒரு சிறந்த மக்கள் சக்தியாக தலை நிமிர்ந்து நிற்கும். அதிமுகவுடன் நாங்கள் வைத்துள்ள கூட்டணி வலுவாக இருக்கிறது. திமுக கூட்டணியில் மோதல் உருவாகிவிட்டது. டாக்டர் ராமதாசும், ஆற்காடு வீராசாமியும் பகிரங்கமாகவே மோதிக் கொள்கிறார்கள். மற்ற கூட்டணி கட்சிகளிடமும் ஒன்றுபட்ட கருத்தில்லை.
குஜராத், இமாச்சலப் பிரதேசம் சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் மூலம் காங்கிரசுக்கு பலத்த அடி விழுந்துள்ளது. கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்தால் அவர்களுடைய செல்வாக்கு சரிந்து விடும்.
எனவே விரைவில் மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவார்கள். இந்த ஆண்டிலேயே நாடாளுமன்ற தேர்தல் வர வாய்ப்புள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் முடிவு செய்வார். நாங்கள் அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம்.
சேது சமுத்திர திட்டம் தேவையானது தான். ஆனால் முதல்வர் கருணாநிதி ராமரை பற்றி தேவையில்லாமல் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து சிக்கலை ஏற்படுத்திவிட்டார். கடவுளை நம்புவோர் மனதை புண்படுத்தாத வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இலங்கை சுதந்திரதின விழாவில் பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக சிங்கள அரசு பொய்யை பரப்பி வருகிறது. இதில் துளியும் உண்மை கிடையாது என்றார் வைகோ.