ராணுவத் தாக்குதலில் எல்.டி.டி.இ உளவுப் பிரிவு தலைவர் பலி
இதுகுறித்த தகவலை விடுதலைப் புலிகள் ஆதரவு இணையதளம் வெளியிட்டுள்ளது. கர்னல் சார்லஸ் மன்னார் மாவட்டம் பள்ளமேடு என்ற இடத்தில் நடந்த, ராணுவத்தின் ஆழ் ஊடுறுவும் படையினரின் கண்ணிவெடித் தாக்குதலுக்குப் பலியானார். இந்த சம்பவத்தில் மேலும் 3 விடுதலைப் புலிகளும் உயிரிழந்தனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உள்விவகார உளவுப் பிரிவின் தலைவராக சார்லஸ் இறுந்து வந்தார். மேலும், வெளி புலனாய்வு பணிகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார். மன்னார் பகுதியில் போரில் ஈடுபட்ட வந்த புலிகளின் படைப் பிரிவுக்கும் அவர் தலைமை தாங்கியிருந்தார்.
நேற்று மாலை ஒரு வேனில் சார்லஸும், விடுதலைப் புலிகளும் போய்க் கொண்டிருந்தபோது நடந்த இந்த தாக்குதலில் அவர்கள் பலியானர்கள்.
நான்கு பேரும் மன்னார் பகுதியில் போரில் ஈடுபட்டிருந்த படையினரைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தனர். தாக்குதலில் இறந்த மற்ற இருவர் சுகந்தன் (சிவபாலன் ஸ்ரீதரன்), வீரமறவன் (பரராஜசிங்கம் சுதன்), கலா (சின்னத்தம்பி கங்காதரன்) எனத் தெரிய வந்துள்ளது.
யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் புலிகள் அமைப்பின் முக்கியப் பிரிவு தலைவரான சார்லஸ் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இந்த சம்பவம் குறித்து விடுதலைப் புலிகளிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
இந்த செய்தியை இலங்கை பாதுகாப்பு அமைச்சக இணையதளமும் இந்த செய்தியை பிரசுரித்துள்ளது. இருப்பினும் இந்த சம்பவத்தை அது உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை.
இருப்பினும் இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், கடந்த இரு வாரங்களாக மன்னார் பிராந்தியத்தில் ராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குதலில் விடுதலைப் புலிகள் பலர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் சார்லஸும் ஒருவராக இருக்கக் கூடும் என்றார்.
மேலும், அடம்பன் என்ற இடத்தில் நடந்த தாக்குதலில் சார்லஸ் இறந்திருக்கக் கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்புதான் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார். அதன் பின்னர் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கர்னல் சார்லஸ் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழ்ச்செல்வன் மரணத்திற்குப் பின்னர் பாதுகாப்புத் துறை செயலாளரும், அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபயா ராஜபக்சே கூறுகையில், விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்களை நாங்கள் நெருங்கி விட்டோம். முன்பு போல அவர்களது நடமாட்டம் இனியும் ரகசியம் இல்லை. அவர்களின் நடமாட்டத்தை நாங்கள் மிகத் தெளிவாக கண்காணித்து வருகிறோம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படுகாயமடைந்துள்ளாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் அந்த அமைப்பின் முக்கியத் தலைவர் சார்லஸ் கொல்லப்பட்டிருப்பது இலங்கை விவகாரத்தில் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.