டாடாவின் ரூ. 1 லட்சம் கார் - 'டாடா நானோ' அறிமுகம்!
பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்த டாடாவின் மக்கள் கார் ரிலீஸாகி விட்டது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த கார் இன்று ரத்தன் டாடாவால் முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டது.
மக்கள் கார் என டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடாவால் செல்லமாக அழைக்கப்பட்ட டாடாவின் புதிய ரூ. 1லட்சம் கார் இன்று டெல்லி, பிரகதி மைதானத்தில் நடந்த ஆட்டோ கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
டாடா நானோ என பெயரிடப்பட்டுள்ள இந்தக் காரை பெரும் கரகோஷத்திற்கு மத்தியில் ரத்தன் டாடா அறிமுகப்படுத்தி வைத்தார். முதல் காரை அவரே மேடையில் ஓட்டி வந்தார்.
வரிகள் தவிர்த்து இந்தக் காரின் விலை ரூ. 1லட்சமாகும்.
3 சிலிண்டர் 624 சிசி பெட்ரோல் என்ஜினுடனும், 33 பிஎச்பி சக்தியுடனும் கூடியதாக புதிய கார் உள்ளது.
30 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிபொருள் டேங்க் இதில் இடம் பெற்றுள்ளது. நான்கு வேகங்களில் செல்லக் கூடிய கியர் வசதி இடம் பெற்றுள்ளது. ஏ.சி. வசதியும் காரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தக் காரில் பவர் ஸ்டியரிங் வசதி கிடையாது.
இதன் மைலேஜ் நகர சாலைகளில் லிட்டருக்கு 22 கிலோமீட்டராகவும், நெடுஞ்சாலைகளில் 26 கிலோமீட்டராகவும் இருக்கும். சராசரியாக 20 கிலோமீட்டர் வரை மைலேஜ் தகரும்.
இரு சக்கர வாகனங்களையே பெரிதும் நம்பியுள்ள நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு இந்த டாடா நானோ மிகப் பெரிய வரப் பிரசாதமாக அமையும் என்று ரத்தன் டாடா தனது பேச்சின்போது குறிப்பிட்டார்.
முன்னதாக, ரத்தன் டாடா ஆற்றிய வீடியோ உரையில், ரூ. 1 லட்சம் கார் குறித்த சிந்தனை எப்படி தோன்றியது என்பதை டாடா விவரித்தார்.
இந்தக் கார் தயாரிப்புக்கு முன்பு தான் சந்தித்த பிரச்சினைகள், சவால்கள் உள்ளிட்டவற்றை விவரித்தார்.
அதன் பின்னர் புதிய வகை கார் அறிமுகப்படுத்தப்பட்டது. ரூ. 1 லட்சம் மதிப்புடைய புதிய வகை காரை ரத்தன் டாடா ஓட்டி வந்து மேடையில் நிறுத்தினார். பின்னர் டாடா மோட்டார்ஸ் தயாரித்துள்ள புரட்சிகர காரை அறிமுகப்படுத்தினார்.
ஸ்டாண்டர்ட் மற்றும் 2 டீலக்ஸ் வகைகளில் இந்த கார் வெளிவருகிகறது. மாருதி 800 காரை விட வெளிப்புறத்தில் 8 சதவீதம் சிறியது. அதேசமயம் மாருதியை விட 21 சதவீதம் உள்புறத்தில் பெரியதாகும்.
4 கதவுகளுடன், 5 சீட்களைக் கொண்டதாக இந்த புரட்சி கார் உள்ளது.
பாரத் 3 எமிஷன் மற்றும் ஈரோ 4 தரக் கட்டுப்பாட்டை இது பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது.
பின்னர் ரத்தன் டாடா பேசுகையில், அனைத்து வகையான பாதுகாப்புகளும் இந்தக் காரில் உள்ளதை முதலில் சொல்லிக் கொள்கிறேன். எனவே இந்தக் காரின் விமர்சகர்கள் அதுகுறித்து இனிமேல் கவலைப்பட வேண்டாம்.
இது அளவில் சிறியது, ஆனால் தொழில்நுட்பத்தில் உயரியது. அதனால்தான் இந்தக் காருக்கு நானோ என பெயரிடப்பட்டது என்றார் ரத்தன் டாடா.
இந்த கார் மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு விநியோகத்திற்கு அனுப்பப்படவுள்ளது.
உலகிலேயே மிகவும் விலை குறைந்த கார் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பவும், செய்தி சேகரிக்கவும் உலெகங்குமிருந்து நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், கேமராமேன்கள் குவிந்திருந்தனர்.
அழகான வடிவில், பட் க்யூட்டாக காணப்படும் டாடா நானோ நிச்சயம் இந்திய மக்களை வெகுவாக கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முக்கிய நிகழ்வுகள்:
1945 - 2ம் உலகப் போரின் முடிவில், டாடா என்ஜீனியரிங் அன்ட் லோகோமோடிவ் லிமிட்டெட் (டெல்கோ) தொடங்கப்பட்டது.
1954 - ஜெர்மனியின் டெய்மல் - பென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து லாரிகள் தயாரிப்பில் டாடா இறங்கியது.
1994 - மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கார் தயாரிப்பில் டாடா இறங்கியது.
1999 - முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்துடன் கூடிய முதலாவது கார் -
டாடா இன்டிகா அறிமுகப்படுத்தப்பட்டது.
2002 - டெய்ம்லருடனான ஒப்பந்தத்தை டாடா முடித்துக் கொண்டது.
- டெல்கோவின் பெயர் டாடா மோட்டார்ஸ் என மாற்றப்பட்டது.
2003 - உலகிலேயே மிகவும் விலை குறைந்ததாக, ரூ. 1 லட்சம் விலையில் கார் தயாரிக்கப் போவதாக டாடா அறிவித்தார்.
2004 - தென் கொரியாவின் டைவூ கமர்ஷியல் வெஹிக்கிள் நிறுவனத்தை டாடா வாங்கியது.
2005 - ஸ்பெயின் பஸ் தயாரிப்பு நிறுவனமான ஹிஸ்பானோ காரசெரோ நிறுவனத்தின் 21 சதவீத பங்குகளை டாடா மோட்டார்ஸ் வாங்கியது. ஏஸ் என்ற புதிய டிரக்கை அறிமுகப்படுத்தியது.
2006 - பியட் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது.
2008 - டாடா நானோ என்று பெயரிடப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்பிலான மக்கள் காரை ரத்தன் டாடா அறிமுகப்படுத்தினார்.