ராணுவத்துக்கு உளவு சொன்ன 9 பேர் கொலை-புலிகள் வெறிச் செயல்
கொழும்பு: இலங்கை ராணுவத்துக்கு உதவி புரிந்த 9 பேரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இலங்கையின் தென் மாவட்டமாக மோனரகலாவில் நேற்றிரவு இச் சம்பவம் நடந்தது. இப் பகுதியில் கலவகலா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கை ராணுவத்தின் துணை அமைப்பான சிவில் டிபன்ஸ் போர்ஸ் அமைப்புக்கு உளவு சொல்லி வந்தனர்.
இந் நிலையில் இந்த கிராமத்துக்குள் நுழைந்த விடுதலைப் புலிகள் கிராமத்தினரை காட்டுப் பகுதிக்குள் இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இப் பகுதியில் பதுங்கியுள்ள புலிகளைப் பிடிக்க ராணுவ கமாண்டோக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், புலிகள் கண்ணி வெடிகளை புதைத்து வைத்துள்ளதால் தேடுதல் வேட்டையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.
புலிகளால் இந்த 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் கூறினாலும் அதை புலிகள் தரப்பு உறுதி செய்யவில்லை.
தமிழர் வீடுகள் மீது விமானப்படை தாக்குதல்-ஒருவர் பலி
இதற்கிடையே நேற்று காலை கிளிநொச்சி நகரில் உள்ள பள்ளிக்கூடம் மற்றும் குடியிருப்புக்களை குறி வைத்து இலங்கை விமானப்படை விமானங்கள் நடத்திய தாக்குதலில் அப்பாவி தமிழர் ஒருவர் பலியானார். 6 பேர் காயமடைந்துள்ளனர்.
வியாழக்கிழமை காலை இலங்கை விமானப்படையின் கிபிர் மற்றும் மிக்-27 ரக விமானங்கள் 20-க்கும் அதிகமான குண்டுகளை வீசியுள்ளன. இதில் 8 வீடுகள் முற்றாக அழிந்துள்ளன. 35 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் அந்த இடத்தில் பல குழிகள் 20 அடிக்கும் அதிகமான ஆழத்துக்கு குண்டுகளால் துளைக்கப்பட்டுள்ளன.
இக்குண்டு வீச்சில் கனகபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் யோகேஸ்வரன் (28) என்ற இளைஞர் கொல்லப்பட்டார்.
கனகபுரம் பள்ளிக்கூடமும் கடுமையாக சேதமடைந்துள்ளது. குண்டு வீச்சால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
கிளிநொச்சி நகரின் மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலால் கிளிநொச்சி நகரம் அல்லோலகல்லோலப்பட்டது. பாடசாலை மாணவர்கள் சிதறி ஓடினர். அரச அலுவலகங்களில் இருந்து பணியாளர்கள் தமது வீடுகளுக்கு ஒடினர்.
தாக்குதலில் கனபுரம் சிவராசா சபேஸ் (19), சுப்பர் சின்னையா (82), சிவராசா சுரேஸ் (14), சின்னத்துரை சிவராசா (44), தர்மலிங்கம் சரண்யா (16), பரந்தனைச் சேர்ந்த பேரியன் சுபேஸ் ஆகியோர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications