2500 கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணை
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,500 கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் கருணாநிதி இன்று வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசின் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
2006ம் ஆண்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் 2006-2007ம் ஆண்டில் 76,622 ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூலை 30ம் தேதி வரை 58,000 இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டிருந்தன.
2007, ஜூலை 31ம் தேதியன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி நடப்பு (2007-2008) ஆண்டில் 3 லட்சம் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.
அந்த அறிவிப்பை தொடர்ந்து 2 லட்சத்து 42 ஆயிரம் வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு, இந்த ஆண்டில் 3 லட்சம் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும் என்ற இலக்கு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
3 மாதங்களுக்கு முன்னதாகவே இலக்கினை மீறி சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதன் அடையாளமாக 3 லட்சத்து ஒன்றாவது இலவச வீட்டுமனை பட்டாவை முதல்வர் தலைமைச் செயலகத்தில் வழங்கி மகிழ்ந்தார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் வேலை நியமனத் தடை சட்டம் கொண்டுவரப்பட்டு, அரசுத் துறைகளில் புதிய பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவது நிறுத்தப்பட்டதால் அரசு திட்டங்களின் பல்வேறு பணிகள் முடங்கிக் கிடந்ததை சுட்டிக் காட்டி, திமுக ஆட்சிப் பொறுப்பேற்றால் அரசு பணிகளில் காலியாக உள்ள இடங்களில் 3 லட்சம் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கேற்ப, இதுவரை 2 லட்சத்து 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு பணிகளில் வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த அடிப்படையில் கிராமப் புறங்களில் பொதுமக்களின் உடனடித் தேவைகளை உடனுக்குடன் கவனித்து நிறைவேற்றுவதில் முக்கிய பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்ததால் 2006ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை காலியாக இருந்த 2,500 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு, உரிய விதிமுறைகளின்படி 2,500 கிராம நிர்வாக அலுவலர்கள் வெற்றிகரமாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு உரிய பணி நியமன ஆணைகள் வழங்கும் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார் என கூறப்பட்டுள்ளது.