மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை!
திட்டக்குடி: தலித் தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கக் கோரி தமிழ் அறிஞர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று நிறைவேற்ற முதல்வர் முன் வந்தது பாராட்டுக்குரியது.
சிமென்ட் ஆலை அதிபர்களுடன் பேசி சிமென்ட் விலை குறைத்தது நல்ல நடவடிக்கை ஆகும். இந்த விலைக்கு சிமென்ட் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் உள்ள தலித் ஊராட்சி தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது. அடிப்படை பிரச்சனைகளுக்கு கூட அவர்கள் தீர்வு காண முடியாத சூழ்நிலையில் தற்போது உள்ளனர். இந்த நிலை மாற உள்ளாட்சித்துறை அமைச்சரும், முதல்வரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விடுதலைப் புலிகள் விஷயத்தில் மத்திய அரசின் நடவடிக்கை தமிழர்களின் நலனுக்கு விரோதமாக உள்ளது. மத்திய அரசை இலங்கை அரசு சிறிதும் மதிக்கவில்லை. எனினும் மத்திய அரசு இலங்கைக்கு உதவி செய்து வருகிறது. இது வருந்ததக்கது என்றார் திருமாவளவன்.